சோதனைக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்ல... - லைகா ராஜு மகாலிங்கம் மறுப்பு
சென்னை: வெளிநாட்டில் லைகா மொபைல் நிறுவனத்தில் சோதனை என்று வந்த செய்திகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த செய்திகளில் உண்மையுமில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
லைகாமொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டு அலுவலகம் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி தொடர்பான புகார்கள் காரணமாக அந்நாட்டு போலீசாரால் சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 19 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன.
டெய்லி மெய்ல், தி டைம்ஸ், தி ரெஜிஸ்டர் உள்ளிட்ட பிரபல ஊடகங்களில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் லைகாமொபைலின் துணை நிறுவனங்களான லைகா புரொடக்ஷன்ஸ் போன்றவற்றைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தியை தமிழில் வெளியிட்ட பிரபல மாலை நாளேடு மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.
இந்த செய்திகள் குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
"லைகாமொபைல் நிறுவனத்துக்கும் இந்த சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. லைகா மொபைல் விநியோகஸ்தரின் நிறுவனம் ஒன்றில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்துடன் முடிச்சுப் போட்டுள்ளனர் அதன் போட்டியாளர்கள். இந்த செய்திகள் வெளியிட்டோர் மீது சட்டப்படி லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறார்கள்.
இன்னொன்று இந்த செய்திகளை லைகா புரொடக்ஷன்சோடு முடிச்சுப்போட்டு சிலர் எழுதி வருகின்றனர். இது மிகத் தவறானது. லைகா புரொடக்ஷன்ஸ் மிகவும் பெருமைக்குரிய நிறுவனம். எங்கள் செயல்பாடுகள் நேர்மையானவை. மிகப் பெரிய புராஜக்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை களங்கப்படுத்த வேண்டாம். இந்த சோதனைக்கும் லைகாவுக்கும் சம்பந்தமே இல்லை," என்று கூறினார்.