தமிழர்களின் விவசாயத்தை அழித்து தஞ்சையை பாலைவனமாக்க விடமாட்டோம் - வைரமுத்து கொதிப்பு
தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது. தமிழர்களின் ஆதி பண்பாடு விவசாயம். அது அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு தெரிகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் நீர் வந்து சேரும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விவசாயத்தை அழித்து தஞ்சையை பாலைவனமாக்க விடமாட்டோம் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. போராட்டக்காரர்களின் ஐபிஎல் போட்டி ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் பண்பாட்டு கலை இலக்கிய பண்பாடு சார்பாக அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சேப்பாக்கம் மைதானம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போராட்டம் நடைபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒத்தி வைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலை போர்க்களமானது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் கற்களை வீசவே தடியடி நடத்தப்பட்டது.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய வைரமுத்து, நீருக்காக நீதி கேட்டு வீதியில் திரண்டுள்ளோம் என்றார். தமிழன் என்ற உணர்வுடனேயே அண்ணாசாலையில் திரண்டுள்ளோம். தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது. தமிழர்களின் ஆதி பண்பாடு விவசாயம். அது அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு தெரிகிறது. நாம் நதிக்காக போராடுகிறோம். மண்ணுக்காக போராடுகிறோம்.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அவகாசம் நீளமானது. அது தேவையில்லை. ஸ்கீம் என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் பொருள் ஒன்றுதான் செயல் ஒன்றுதான். செயல்களின் மீதுதான் அக்கறை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் நீர் வந்து சேரும். எங்களுக்கு உரிமையான நீர் வந்து சேர வேண்டும்
தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் அழிக்கப்பட்டு எண்ணெய் படுகையாக்க மாற்ற யாராவது முயற்சி செய்தால் அதை விட மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே எங்களுக்கான உரிமை கிடைக்கும் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.