திவிக நிர்வாகி ஃபாரூக் படுகொலைக்கு மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா கண்டனம்
கோவை: கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் நேற்று முன்தினம் இரவு உக்கடம் பகுதியில் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த படுகொலையில் ஈடுப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திகிறது.
கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாக இருக்காது, பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒருமித்து செயல்படவேண்டிய இந்த தருணத்தில் பதட்டம் நிறைந்த கோவையில் இதுபோன்ற படுகொலை நடைப்பெற்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவல்துறை உண்மை குற்றவாளிகள அனைவரையும் உடனே கைதுச் செய்து தண்டிக்க வேண்டுமென கோருகிறேன். சகோதரர் ஃபாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா அறிக்கையில் கூறியுள்ளார்.