மூடப்பட்ட 1500 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயற்சிப்பதா?: ஜவாஹிருல்லா கண்டனம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அத்துமீறிய நடவடிக்கையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை: மூடப்பட்ட 1500 மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் படிப்படியாக மதுவிலக்கு அமலாக்கப்படும் எனும் வாக்குறுதியுடன் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக அரசின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது 2016-ம் ஆண்டின் ஆட்சி துவக்கத்தின் முதல் மூன்று உத்தரவுகளில் ஒன்றாக 500 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டதோடு கடைகள் இரண்டு மணி நேரம் தாமதமாக திறக்கும் வகையில் உத்தரவிட்டிருந்தார்.
அப்போதே அந்த உத்தரவுகளை வருமானம் குறைவான கடைகளை மட்டும் மூடியதன் மூலம் உத்தரவின் நோக்கத்தை முனை மழுங்கச் செய்தது தமிழக அரசு.
இதற்கிடையே குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதனால் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டு அதன் தொடர்ச்சியாக படிப்படியாக பூரண மதுவிலக்கை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக நாம் எதிர்பார்திருந்த வேளையில் நேற்று தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் பல்வேறு தேசிய/மாநில நெடுஞ்சாலைகளை மாநகர/நகர சாலைகளாக வகைமாற்றம் செய்து 25-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற மாநகராட்சி/நகராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மூடப்பட்ட 1500 டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி மேற் கொண்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி/நகராட்சி மன்றங்கள் இல்லாத சூழலில், அப்பட்டமான பொய்க் காரணங்களை கற்பித்து அதிகாரிகள் மூலம் தேசிய/மாநில/மாவட்ட முக்கிய சாலைகளை மாநகராட்சி/நகராட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்ய முயலுவது சட்டவிரோத செயலாகும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அத்துமீறிய நடவடிக்கையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். சட்ட விரோதமாக வகைமாற்றம் செய்யப்படும் சாலைகளில் மதுகடைகள் அமைக்கப்பட்டால் அவை அப்புறப்படுத்தும் வரை மனிதநேய மக்கள் கட்சி இடைவிடாத போராட்டத்தை நடத்தும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.