தா.கி நினைவிடத்தில் முதன் முறையாக அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்...
பரமக்குடி: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 13 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக மானாமதுரை அருகே உள்ள கொம்புக்காரனேந்தலுக்கு சென்று அங்குள்ள மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப்பயணம் மூலம் மாவட்டந்தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். 11வது நாளான இன்று மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை மானாமதுரையில் இருந்து தொடங்கினார்.
தா.கிருஷ்ணனுக்கு அஞ்சலி
கொம்புக்காரனேந்தலுக்கு சென்று முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் முதன் முறையாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் நினைவாலய நிர்வாகிகள் கொடுத்த டீயை சாப்பிட்டு விட்டு முப்பது நிமிடம் இருந்து விட்டு பரமக்குடிக்கு கிளம்பினார். தா.கி கொல்லப்பட்டு 13 வருடங்கள் கழித்து முக ஸ்டாலின் அவரது சமாதிக்கு வந்துள்ளார். இடையில் பலமுறை இந்த இடத்தை கடந்து சென்றுள்ளார். ஆனால் ஒரு முறை கூட வந்ததில்லையாம் ஸ்டாலின்.
பரமக்குடியில் குறை கேட்பு
பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு புறப்பட்டு சென்றார். பரமக்குடியில் நடைபயணமாக சென்று ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பெரிய கடை வீதியில் வியாபாரிகள், மக்களிடம் கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
தண்ணீர் பிரச்சினை
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி தான் நினைவிற்கு வரும். தி.மு.க. ஆட்சியில் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது இந்த மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.617 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினேன்.
விவசாயம் பாதிப்பு
இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது ஒவ்வொரு வருடமும் ஆடிப்பட்டத்தின்போது வைகை அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்.
தேவர் சிலைக்கு மாலை
முதுகுளத்தூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோரிக்கை வைத்த மக்கள்
பின்னர் மு.க.ஸ்டாலின் எமனேஸ்வரம், பரமக்குடியில் நெசவாளர்களையும், மிளகாய்-வத்தல் வியாபாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை.எனவே கூலி மற்றும் ரிபேட் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திமுக ஆட்சியில்
அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை திமுக கொண்டு வந்தது என்றும், தண்ணி இல்லா காடு என்ற பெயரை மாற்றியது திமுக தான் என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். மிளகாய் வற்றலை பாதுகாக்க கிட்டங்கி அமைத்தது திமுக ஆட்சி தான் என்றும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் மிளகாய் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.