89 வயக்காட்டு பொம்மைகள்.. 131 கொத்தடிமைகள்.. சட்டசபையில் திமுக- அதிமுக மோதல்! ஸ்டாலின் குமுறல்
சென்னை: சட்டசபையில் இன்று மின்சாரத்துறைக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா ஒரு வார்த்தையை சொல்ல, அது திமுக உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலுக்கு ஒரு வார்த்தையை சொல்ல அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார் சபாநாயகர் தனபால்.
இதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்றதோடு, திமுகவினர் குறித்து அதிமுக எம்எல்ஏ முத்தையா கூறிய வார்த்தையை நீக்கும்படி, கோரிக்கைவிடுத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர், அந்த வார்த்தையை நீக்க மறுத்துவிட்டார்.
திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
வயக்காட்டு பொம்மை
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் அளித்த பேட்டி: அதிமுக உறுப்பினர் எங்களை பார்த்து 89 வயக்காட்டு பொம்மைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு திமுக எம்எல்ஏக்கள் கோரினோம்.
அவைக்குறிப்பில் தொடருகிறது
அதிமுக உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அவ்வாறு கூறியதாகவும், எனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.
கொத்தடிமைகள் என்றேன்
இதன்பிறகு எனக்கு பேச அனுமதி கேட்டேன். நீண்ட கோரிக்கைக்கு பிறகு எனக்கு பேச சபாநாயகர் அனுமதியளித்தார். அப்போது, நான் 131 கொத்தடிமைகள், சோற்றால் அடித்த பிண்டங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.
எனது பேச்சை நீக்கிவிட்டார்
ஆனால், நான் பேசிய இந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார். நானும் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்தான் விமர்சனம் செய்தேன். எனவே அதிமுக எம்எல்ஏ பேசியது அவைக்குறிப்பில் இருக்கலாம் என்றால், நான் பேசியதும் இருக்கலாமே என வாதிட்டேன்.
மாற்ற முடியாது
ஒருவேளை, நான் பேசியதை நீக்கினால், அதிமுக எம்எல்ஏ பேசியதையும் நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தேன். ஆனால் சபாநாயகரோ, தான் தீர்ப்பை அறிவித்துவிட்டதாகவும், அதை மாற்ற முடியாது என்றும் கூறிவிட்டார்.
போராடினோம்
என்ன இருந்தாலும் நாங்கள் சுயமரியாதைக்காரர்கள் இல்லையா.. எனவே சுயமரியாதையை காக்க கடைசிவரை போராடினோம். எனவே சட்டசபையை, சபாநாயகர் ஒத்திவைத்து சென்றுள்ளார். சபாநாயகர் சுமூக சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சர்வாதிகார மனோபாவத்தில் செயல்படுகிறார். முதல்வர் சொல்வதை அப்படியே செய்கிறார். இது வெட்கப்பட வேண்டியது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.