மத்திய அரசு நாட்டாமை செய்வதை முதல்வரே ஒப்புகிட்டாரு.. பாயிண்ட்டை பிடித்த ஸ்டாலின்
மத்திய அரசு நாட்டாமை செய்கிறது என்பதற்கு முதல்வர் பழனிசாமியே ஒப்புதல் தந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: திமுக எம்எல்ஏக்கள் கைதை கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆளும் அதிமுக அரசின் மீது திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பெருந்திரளாக கூடியிருந்த திமுகவினர் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டிற்கு சனியாக வந்து சேர்ந்திருக்கிறது அதிமுக. அந்தப் பிணியை ஒழிப்பதற்காகவே நாம் இங்னு ஒன்றுதிரண்டிருக்கிறோம். இதை எடுத்துக்காட்டவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதுவே கவிழும்
அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகி விட்டதற்கான போராட்டமல்ல இது. சென்னையில் நான் அளித்த பேட்டியைப் போலவே ஆட்சியை நாங்கள் கவிழ்க்க வேண்டாம், அவர்களே அவர்களை கவிழ்த்துக்கொள்வார்கள். அதிமுகவில் தான் எத்தனை கோஷ்டிகள் ஏற்கனவே 3 கோஷ்டி இருந்தது பத்தாது என்று இன்று காலையில் 4வது கோஷ்டியும் கிளம்பிவிட்டது.
ஆட்சி மாற்றம்
இன்றோ, நாளையோ, ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகோ ஆட்சி கலைந்துவிடும். ஆட்சியில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டவே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மிக விரைவில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டு திமுக ஆட்சி அமைக்கும், அப்போது அந்த காவல்துறையினர் நிச்சயம் 3 எம்எல்ஏக்கள் கைதுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.
குட்டு உடைந்தது
குட்டிக்கதையில் அதிமுகவினருக்கு அவ்வளவு ஆசை, ஜெயலலிதாவும் கதைவிடுவார். அந்தக் கதையை நம்பி தான் நாடு கெட்டுப்போய் உள்ளது. அதே போன்று முதல்வர் எடப்பாடியும் குட்டிக் கதை சொல்லியிருக்கிறார். அவர் எந்த எண்ணத்தில் கதை சொல்கிறார் என்று படித்து படித்து பார்த்தேன் அதில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இது பினாமி ஆட்சியல்ல, ஜெராக்ஸ் ஆட்சியல்ல என்று சொல்லிவிட்டு நிலையான ஆட்சி என்று கூறியுள்ளார்.
என்ன பதில்?
புலி, நரி, ஓநாய் கதையை சொல்லி மத்திய அரசு நாட்டாமை செய்கிறது என்பதற்கான ஒப்புதலாகத் தான் முதல்வர் பழனிசாமி சொன்ன உதாரணம். மத்திய அரசு நாட்டாமை செய்கிறது என்று நான் சொன்ன போது பொங்கி எழுந்த தங்கச்சி தமிழிசையும், ஏர்போட்டில் பேட்டி கொடுப்பதற்காக மத்திய அரசு அமைச்சராக வைத்திருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனும் இப்போ என்ன சொல்லப்போறாங்க. நாட்டாமை செய்கிறார்கள் என்பதற்கும் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, என விளாசித் தள்ளினார் ஸ்டாலின்.