ஜல்லிக்கட்டை காண மதுரை வந்தடைந்தார் மு.க. ஸ்டாலின் !
இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நேற்று மாலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் முழு மூச்சாய் நின்று பெரும் போராட்டத்தை நடத்தினர். இதனால் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
அலங்காநல்லூரில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் அலங்காநல்லூர் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்வதாக இருந்தது. அதேபோல் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதனால் ஜல்லிக்கட்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வமோ, சசிகலாவோ கலந்து கொள்வதாக இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்தது. இப்படியொரு உற்சாகமான நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் சென்னையை விட்டு நகர முடியாத சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடக்கவுள்ளது. இதற்காக நேற்று இரவே மதுரை வந்துவிட்டார் ஸ்டாலின். இன்று காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.