பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், ஃபிளக்ஸ்கள் வேண்டாம்.. திமுகவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: திமுக பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில், கட்சித் தொண்டர்கள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக, பேனர்கள்,கட் அவுட்டுகள் வைக்காதீர்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றவுடன், திமுக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் கட்சித் தொண்டர்கள் தனக்கு பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், திமுகவினர் பொதுக்கூட்டங்களில் பெரிய அளவில் பேனர்களை வைத்துவந்தனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் வைக்கப்பட்ட திமுக பேனர், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன. அப்படி வைக்கப்பட்ட பேனர்களால் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வந்ததன் பேரில், இன்று ஸ்டாலின் திமுக கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக தொண்டர்கள் கட்சிப் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில், பொதுமக்களுக்கும், வாகனங்கள் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.