திமுக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தருவர்: மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை பெற்றுத் தருவார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை கோபாலபுரம் சாரதா உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று வாக்களித்தார்.
ஆளுங்கட்சிக்கு எதிரான அலை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. தோல்வி பயத்தினால் பணத்தை கொடுத்து வாக்கு பெற முயற்சி செய்தனர்.
வெற்றி திமுகவிற்கே
ஆனாலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தேடித் தருவார்கள் என்பதை மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இயந்திரங்கள் பழுது
பெரும்பாலான இடங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுதாகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. பூத்துகளில் முகவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்து பின்னர் சரிசெய்யப்பட்டு வருகிறது என்றார்.
மு.க.அழகிரி
இதனிடையே திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தனது மகன் தயாநிதி அழகிரியுடன் சென்று மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வெற்றி எங்களுக்கே
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, வெற்றி எங்களுக்கே என்று பொதுவாக கூறினார். அவர் யாரை சொல்லுகிறார், எந்த கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்று தெரியாமல் செய்தியாளர்கள் குழம்பி நின்றனர்.