மோடியிடம் கேட்டது பொய்யா.. சுப்ரீம் கோர்ட்டில் சொன்னது பொய்யா… தமிழக அரசுக்கு ஸ்டாலின் குட்டு
தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் நிவராணம் கேட்டது பொய்யா அல்லது விவசாயிகள் தற்கொலையே இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் சொல்வது பொய்யா என தமிழக அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்
சென்னை: விவசாயிகள் தற்கொலையே தமிழகத்தில் இல்லை என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தை திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: ஏற்கனவே விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கொடுமையைவிட மிக அதிகமான கொடுமையை தமிழக அரசு செய்துள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்திற்கே சென்று பிரமாணப் பத்திரம் அளித்து விவசாயிகளை கொச்சைப்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று சொன்னால், இதே மாநில அரசு வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவித்துவிட்டு, அதற்கு ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி நிதி தேவை என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.
பொய்யா?
வறட்சி இருந்ததால்தானே தற்கொலை என்பது தமிழகத்தில் நடந்தது. அந்த வறட்சியை அடிப்படையாக வைத்துத்தானே மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்டது. எனவே, அது பொய்யா? அல்லது உச்ச நீதிமன்றத்தில் தவறான கருத்தை பதிவு செய்துள்ளார்களே அது பொய்யா? இதுபற்றி நிச்சயமாக மக்களுக்கும் குறிப்பாக விவசாய பெருங்குடி மக்களுக்கும் தெரிந்தாக வேண்டும்.
சந்திப்பு
விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை. இப்போது நேரம் கொடுத்தாலும் நாங்கள் புறப்பட்டுச் செல்ல தயாராக உள்ளோம். விவசாயிகளோடு எப்போதும் தோள் கொடுப்போம்.
மின்வெட்டு
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்சனைப் பற்றி சிந்திப்பதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லை. ஏனென்றால், இரண்டாக உடைந்திருக்கக் கூடிய அவர்களது கட்சியை ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.
அக்கறை
முதல் முதலில் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில்தான் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் அக்கறை எடுத்துக் கொண்ட மின்துறை அமைச்சர், மின்வெட்டுப் பிரச்சனையில் அக்கறை எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருந்திருக்கும். அதுப்பற்றி எல்லாம் இந்த ஆட்சிக்கு கவலை இல்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.