கருணாநிதியின் சிறப்புகள் சட்டசபையில் பதிவாகவிடாமல் முதல்வர் நயவஞ்சகம்… ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மு. க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதுதொடர்பாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் சட்டசபைக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டு கால சிறப்புகள் சட்டசபையில் பதிவாகாமல் தடுக்கவே முதல்வர் பழனிச்சாமி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்துவிட்டார். மானியக் கோரிக்கை மீதான விவாதமே நடத்தப்படவில்லை. சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறேன். சட்டசபையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் முதல்வருக்கு எழுந்துள்ளது.
மேலும், மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எந்தவித பதிலும் நீட் குறித்து வரவில்லை. தொடர்ந்து அமைதி காத்தால் திமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.