அஷ்தோஸ் பிஸ்வாஸ் அகங்கார பேச்சு... உடனே நீக்குங்க - ஸ்டாலின் போர்க்கொடி
டெங்கு குறித்து பீதியை கிளம்பும் வகையில் பேசிய மத்திய மருத்துவக் குழுத் தலைவர் அஷ்தோஸ் பிஸ்வாஸை நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
சென்னை: டெங்கு ஒழிப்பு என்பது அரசின் கைகளில் இல்லை என்று பொறுப்பற்ற வகையில் பேசிய மத்திய மருத்துவக் குழு தலைவரை நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் உயிரிழப்புகள் ஏராளமாக உள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு இன்று சேலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குழுவின் தலைவர் அஷ்தோஸ் பிஸ்வாஸ் கூறுகையில், டெங்குவை ஒழிப்பது என்பது அரசின் கையில் இல்லை. டெங்கு என்பது சாதாரண காய்ச்சல் என்று கூறினார்.
மத்திய அரசுக்கு கண்டனம்
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் இல்லை என்று தமிழகத்தில் டெங்கு பாதிப்பை பார்வையிட வந்திருக்கும் மத்திய குழுத் தலைவரும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருமான அஷ்தோஸ் பிஸ்வாஸ் பேட்டியளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது இவைகள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பு.
அகங்காரம் உள்ளதாக காட்டுகிறது
இந்த அடிப்படையை கூட தெரிந்து கொள்ளாமல், ஒரு மருத்துவர் இப்படி அறிவித்திருப்பது அகங்காரத்தின் உச்சமாக உள்ளது. மத்திய அரசு என்ன காரணத்திற்காக இந்தக் குழுவை மாநிலத்திற்கு அனுப்பியதோ அந்த நோக்கத்தை விசாரணை முடியும் முன்பே சிதறடிக்கும் முயற்சியாகவே பிஸ்வாஸின் பேட்டி அமைந்துள்ளது. மத்திய குழுவினருடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் இந்தப் பேட்டி பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருப்பதில் இருந்து, தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான டெங்கு பாதிப்புகளை, மத்தியில் இருந்து வந்துள்ள குழு மட்டுமல்லாமல், இங்குள்ள தமிழக அரசும் கிள்ளுக்கீரையாகவே கருதுகிறது.
40 பேர் மரணம் பெரிதல்ல
12 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 40 பேரின் மரணம் ஒன்றும் பெரிதல்ல என்றும் பிஸ்வாஸ் கூறியிருப்பது, தமிழக மக்களின் உயிரைத் துச்சமாக நினைத்து, அவமதிக்கும் போக்காக இருக்கிறது. அந்த மருத்துவரின் கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? மத்திய அரசிடமிருந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.256 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மாநில அரசு கோரியுள்ளது.
18 பேர் மட்டுமே இறப்பு
மாநில அரசின் அறிக்கையில் 18 பேர் இறந்துள்ளதாக பொய்யான விவரங்களை கூறியிருப்பது மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழகம் வந்துள்ள மத்திய குழுவின் தலைவர் பிஸ்வாஸை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நீக்க வேண்டும். மக்களை பீதியில் ஆழ்த்தும் அளவுக்கு பிஸ்வாஸின் பேட்டி உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.