அதானி நிறுவனத்துடன் இணைந்து ரூ.23000 கோடி கொள்ளை... அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: அதானி நிறுவனத்துடன் இணைந்து பல கோடி கொள்ளையில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அரசு முடக்கியுள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், இந்த மாவட்டத்தில் நான் பேசுகின்ற இந்த நேரத்தில் எனது நினைவுகள் எல்லாம் சாபத்தை நோக்கிதான் செல்கிறது. காரணம் இந்த ராமநாதபுரம் சாபத்தை போக்கும் இடம். எனவே தமிழகத்தை பிடித்திருக்கக் கூடிய சாபத்தை போக்க இந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாக்கு கேட்க கூட மக்களை சந்திக்க முடியாத நிலை இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. ஆனால் நாங்கள் தெம்போடு, திமிரோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். காரணம் 2006 ல் தலைவர் கலைஞர் 5 வது முறையாக முதல்வரான போது, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பேற்று இந்த மாவட்டத்திற்கு நிறைவேற்றிய பணிகள் உங்களுக்கே நன்றாக தெரியும் என்று கூறினார்.
தங்கப்பதக்கம் தந்த மாவட்டம்
உள்ளாட்சித்துறையில் இந்த மாவட்டத்திற்கு செய்த திட்டங்களுக்காகத்தான் தலைவர் கருணாநிதி அவர்களின் கையால் தங்கப் பதக்கம் பெற்றேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக வறட்சியான இந்த மாவட்டத்திற்கு அரசு அதிகாரிகள் தண்டனையாக யாரையாவது மாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
குடிநீர் திட்டம்
தண்ணியில்லாத காடு என்று சொல்லும் நிலையினை மாற்ற, 2006ல் ரூ.616 கோடி மதிப்பில் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றி தந்தார் கலைஞர். இதன் மூலம் 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 18 ஊராட்சிகள், 3163 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தேன்.
இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றம்
31-01-2007 அன்று குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பல அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 11-06-2009 அன்று ராமநாதபுரம் மக்களுக்கு குடிநீர் திட்டத்தை அர்ப்பணித்தவர்தான் தலைவர் கருணாநிதி.உடனே தலைவர் கலைஞர் அவர்கள் தான் அறிவித்ததை நினைவு கூர்ந்து, எங்களை அழைத்து விருதுகள் வழங்கி கவுரவித்தார். இந்த திட்டத்தினால் ஏற்பட்ட பயன் களை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
அதானி நிறுவனத்துடன் இணைந்து ஊழல்
அதானி குழுமம் என்பது ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்யும் மிகப்பெரிய நிறுவனம். அதனுடன் மிகப்பெரிய ஒரு ஒப்பந்தத்தை போட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ய 5436 கோடி ரூபாயில் சூரிய மின் திட்டம் நிறைவேற்ற அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.
விவசாயிகளின் நிலங்கள்
ஏழை விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் அதானி குழுமத்தின் புரோக்கர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி 20 அல்லது 25 நாட்களுக்கு தலைமைச் செயலகத்துக்கே வராத நேரத்தில் திடீரென ஒரு நாள் கோட்டைக்கு அதானி நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ரூ. 23000 கோடி நஷ்டம்
இதில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெளி மாநிலங்களில் 5.40 ரூபாய்க்கு வாங்கும் அதே மின்சாரத்தை அதானி குழுமத்திடம் 7.01 ரூபாய்க்கு ஜெயலலிதா அரசு வாங்குவதால் தமிழக மின்சார வாரியத்திற்கு 23000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் வருகிறது என்று சொன்னால் ஜெயலலிதாவிற்கும், அமைச்சர்களுக்கும் எந்தளவுக்கு பங்கு போகிறது என்பதை இதைவிட ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது.
அமைச்சர்கள் கொள்ளை
அமைச்சர்கள் பல வழிகளில், பல விதங்களில் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இங்கு இருக்கக் கூடிய அமைச்சர் சுந்தர்ராஜன் கதையே வேறு. அவர் நள்ளிரவில் தான் ஆய்வு செய்ய போவார். அந்த காட்சிகள் எல்லாம் வாட்ஸ் அப்பில் வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் இன்றைய அமைச்சர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
எம்.பி. எங்கே போனார்?
அதேபோல ஒரு எம்.பி. இருக்கிறார் இங்கு. நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பப்பட்டவர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது எம்.பி. எங்கே என்று தேட வேண்டிய நிலையில் இருக்கிறார். அதனால் இப்போது அவரால் ஓட்டு கேட்டு செல்ல முடியவில்லை. வாக்காளர்கள் அவரது கார் கண்ணாடிகளை உடைத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.