'சின்ன மா மரம்.. பெரிய மா மரம்'.. கதை சொல்லி கல்யாண வீட்டில் கலகலப்பூட்டிய மு.க.ஸ்டாலின்!
சின்ன மா மரம், பெரிய மா மரம் என்று கதை சொல்லி திருச்சியில் நடந்த திருமண விழாவில் கலகலப்பூட்டினார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி: திருச்சியில் நடந்த மறைந்த ராமஜெயத்தின் மகள் ஸ்ரீஜனனி - டாக்டர் விவேக் திருமண விழாவில் நாட்டு நடப்பையும், அரசியல் சூழலையும் வைத்து கதை சொல்லி கல்யாண வீட்டை கலகலப்பாக்கினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் மகள் ஜனனி. அவரது திருமணம் நேற்று திருச்சி அருகே உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் அரசியல் பேசவில்லை என்று கூறி விட்டு அரசியலைத் தொட்டு சின்னக் கதை சொல்லி கலகலப்பூட்டினார் ஸ்டாலின். ஸ்டாலின் கூறிய கதை:
பெரிய மா மரம்
இந்த விழாவில் நான் அரசியல் பேசவில்லை என்றாலும், முறையாக நாகரீகம் கருதி ஒரு சின்ன கதையை மட்டும் இங்கே சொல்லி விடைபெற விரும்புகிறேன். கிராமத்தில் ஒரு ஆறு இருக்கிறது. அந்த ஆற்றில் ஐந்தாறு வருடமாக தண்ணீர் இல்லை, வறண்டு போய் கிடக்கிறது. அந்த ஆற்றில் ஒரு பெரிய மா மரம் சரிந்து கிடக்கிறது.
பாலம்
ஆற்றில் தண்ணீர் ஓடிய காலத்தில் எல்லாம் கிராம மக்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல அந்த மரத்தை தான் ஒரு பாலமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரே இல்லாமல் பாலைவனமாக காட்சி அளித்ததால் கிராமமக்கள் வெயிலில் நடந்தே சென்று வேதனைகளை தாங்கி கொண்டு ஆற்றை கடந்து சென்று வந்தனர்.
காணாமல் போன மா மரம்
இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் திடீரென ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பெரிய மா மரம் காணாமல் போய்விட்டது. அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா? அல்லது எப்படி காணாமல் போனது என மர்மமாக இருந்தது.
சின்ன மா மரம்
இந்த நேரத்தில் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல சின்ன மா மரம் போன்ற ஒன்று கிடைத்தது. அதன் மீது கிராம மக்களில் சிலர் ஏறினார்கள். நடு ஆற்றில் சென்ற போது தான் அது சின்ன மா மரம் அல்ல. ஒரு முதலையின் முதுகு என தெரியவந்தது. இதனால் அதில் ஏறி இருந்தவர்களுக்கு பயம் வந்து விட்டது. ஆபத்தில் இருந்து காப்பாற்றும்படி சத்தம் போட்டார்கள்.
அது முதலை
அப்போது ஆற்றின் கரையில் இருந்தவர்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் தெரியாமல் முதலை மீது ஏறி விட்டீர்கள். ஒரு நல்ல படகு வரும் அதில் ஏறி நாங்கள் கரையை கடப்போம். அதுவரை முதலையிடம் இருந்து தப்பி நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களையும் அந்த படகில் ஏற்றி கொண்டு போய் கரை சேர்ப்போம் என கூறினார்கள்.
நான் யாரையும் குறிப்பிடலை...!
யாரையும் குறிப்பிட்டு நான் இதனை கூறவில்லை. இது சின்ன கதை. இதனை அரசியலோடு நீங்கள் கலந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறி திருமணத்திற்கு வந்தவர்களை சிரிக்க வைத்து விடை பெற்றார் ஸ்டாலின்.