தேர்தல்களில் மக்கள்தான் எஜமானர்கள்.. மு.க.ஸ்டாலின் கருத்து!
5 மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வாழத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேர்தல்களில் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் மக்கள் தான் எஜமானர்களாக இருக்கக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் வாக்களித்துள்ளார்கள். வெற்றி பெற்று இருக்கக் கூடிய அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், பெரும்பாலும் அந்தந்த மாநில ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்து இருக்கக் கூடிய சூழ்நிலையை பார்க்கின்ற போது, விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கக் கூடிய தேர்தலிலும் நிச்சயமாக ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய அதிமுகவிற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.