சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வையுங்கள்.. மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக மக்களின் நலன் கருதி சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மோடி உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
'தமிழக மக்களின் உணர்வுடன் கலந்துள்ள சேலம் உருக்காலையின் 51 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு தமிழக நலனை புறக்கணிக்கும் செயலாக அமைந்துள்ளது. ஏற்கெனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின் வாங்கியதால், காவிரி டெல்டா விவசாயிகள் நிலைகுலைந்து, இன்றைக்கு ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மறுத்து வரும் மத்திய அரசின் போக்கால் இளைஞர்களின் உணர்வுகள் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்போது, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு ஒட்டு மொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே உலை வைக்கும் செயலாக அமைந்திருக்கிறது.
சேலம் உருக்காலை திட்டத்தை உருவாக்க முதல்வராக இருந்த போதே பேரறிஞர் அண்ணா 23.7.1967 -ல் எழுச்சி நாள் போராட்டம் நடத்தியதையும், இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லையென்றால் ஐந்தாண்டு திட்டத்தையே ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி 1970 -ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் துணிச்சலாக முறையிட்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.
தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளின் படி, 17.4.1970 அன்று சேலம் உருக்காலைத் திட்டம் துவக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, 16.9.1970 அன்று பிரதமர் இந்திரா காந்தியும், தமிழக முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதியும் சேலம் உருக்காலைத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள் என்பது கடந்த கால வரலாற்று சான்று.
இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த சேலம் உருக்காலை 2003-லிருந்து 2010 வரை தொடர்ந்து லாபகரமாகவே இயங்கி வந்தது. அதுவும் ரூ.100 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாக இயங்கி வந்ததை இன்றைக்கும் மத்திய அரசின் அறிக்கைகளில் காண முடியும். இங்கே 120 மெகாவாட் தரும் மின் திட்டத்தை துவங்காமல், தொடர்ந்து மத்திய அரசு பிடிவாதமாக இருந்து வருவதால், இந்த உருக்காலையின் வளர்ச்சி செயற்கையாக தடுக்கப்பட்டுள்ளது என்பது தான் எதார்த்தமான உண்மை.
இதனால் 2500 நேரடி பணியாளர்களும், மறைமுகமாகப் பயன்பெறும் 5000 -க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் பாழாகும் சூழ்நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் செய்தி வந்தவுடனேயே தலைவர் கருணாநிதி அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
பிறகு 8.10.2016 அன்று தொ.மு.ச.வின் சார்பில் தொழிலாளர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். அனைத்து தொழிலாளர்களுமே நுழைவாயில் கூட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சேலம் உருக்காலையின் 51 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை அவசர அவசரமாக, மத்திய சுரங்கம் மற்றும் உருக்குத்துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் பாராளுமன்றத்தில் அறிவித்து, அதற்காக போர்க்கால நடவடிக்கையிலும் இறங்கியிருக்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து அதிமுக அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழக நலனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல, சென்னைக்கும் - டெல்லிக்கும் சுற்றுலா போவது போல் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழக மக்களின் நலன் கருதி சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டபடி நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை ஆய்வு செய்ய அமைத்து, 120 மெகாவாட் கிடைக்கும் மின்சாரத் திட்டத்தையும் செயல்படுத்தி, சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான அழுத்தத்தை கொடுக்க, தமிழகத்தின் சார்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.