அடிக்காதே, அடிக்காதே! பச்சப்புள்ள வயித்துல அடிக்காதே... ஸ்டாலின் போராட்டம்!
சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பினாமி ஆட்சி நடத்தும் ' ஜீரோ' என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாடினார்.
தமிழக அரசின் பால்விலை உயர்வை கண்டித்து தி.மு.க., சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சேப்பாக்கத்தில் கட்சி தலைவர் கருணாநிதியும், வட சென்னையில் மு.க.ஸ்டாலினும் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அதிரடியாகத் தாக்கினார். வரலாற்றில் இல்லாத அளவிற்கு பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 ரூபாய் உயர்த்தியது மிக வேதனைக்குரியது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் பால் விலை உயர்த்தினார்.
பினாமி ஆட்சியில்
ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்று வந்த பின்னர் பினாமி ஆட்சி நடக்கிறது. இந்த பினாமி ஆட்சியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் ஒரு குடும்பத்தினர் மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது.
பினாமி ஜீரோ
பால் உற்பத்தியாளர்கள் பல முறை பால் விலை உயர்த்த சொன்னார்கள். பால் கொள் முதல் விலை மட்டுமே உயர்த்தினோம். பால் விலையை சல்லிக்காசு கூட உயர்த்தவில்லை. பினாமி ஜீரோ பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார். இது யார் மூலம் வெளி வருகிறது என்பது எனக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும்.
வெளிப்படையாக சொல்வாரா
ஆவின் நிறுவனம் பாதாளத்திற்கு சென்றுள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெயலலிதா நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்னதாக அமைச்ரவையில் மாற்றம் செய்தார். பால்வளத்துறை அமைச்சரை நீக்கினார். இது ஏன் என்பது குறித்து பன்னீர்செல்வம் வெளிப்படையாக சொல்ல தயாரா?
ஆவின் பால் ஊழல்
பால் வளத்துறையில் ஊழல் நடந்தது. வைத்தியநாதன் யார் ? ஜீரோ பன்னீர்செல்வம் விளக்குவாரா? அவர் அ.தி.மு.க வை சேர்ந்தவர். கூலி தொழிலாளியாக இருந்து மிக பெரிய செல்வந்தராக மாறியுள்ளார். ஊழல் நடைபெற்றதால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அம்மா உணவகம்
வாட் வரி உயர்வு காரணமாக சர்க்கரை விலை கிலோ 35 ஆக உயர்ந்துள்ளது. மாநகராட்சிக்கு வாங்கிய வாக்கி டாக்கிகள், அம்மா உணவகத்தில் இட்லி மாவு காலியாகிப்போச்சு என்று அலறுகிறது.
சகாயத்திற்கு எதிர்ப்பு
அதிகாரி சகாயம் கிரானைட் ஊழல் குறித்து வெளியே கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா ஆட்சி அவரது நடவடிக்கைக்கு துணையாக இருப்பேன் என்று ஜெயலலிதா சொன்னாரா? ஆனால் இதனை விசாரிக்க கூடாது என்றார்.
அரசுக்கு அபராதம்
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கூடாது என உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதே? நீதிமன்ற உத்தரவை இந்த ஆட்சி நிறைவேற்றவில்லை. ரூ. 10 ஆயிரம் நீதிமன்றம் அபராதம் போட்டது.
முடிவு கட்டுவோம்
இந்த புண்ணியவதி ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் வீட்டிற்கு அனுப்பியது. இதனால் பல குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட மாற்றம் ஏற்பட கலைஞர் தலைமையில் உறுதி ஏற்போம். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பாடையில் பால்கேன்
வடசென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி சிவா கோஷம் எழுப்பிட தொண்டர்கள் பதில் கோஷம் எழுப்பினர். பால்கேன்கள் பாடையில் வைத்து மாலை போட்டு தொண்டர்கள் தூக்கி வந்தனர்.
ஏழை, பாழை தவிக்குது
வட சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டர்கள் அரசை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது அவர்கள், அடிக்காதே, அடிக்காதே ! பச்சப்புள்ள வயித்துல அடிக்காதே ! ஏற்றாதே, ஏற்றாதே மின்கட்டணத்தை ஏற்றாதே, வாபஸ் வாங்கு ! வாபஸ் வாங்கு பால் விலை உயர்வினை வாபஸ் வாங்கு ! பால்விலை ஏற்றத்தால் ஏழை பாழை எல்லாமே ஏங்கி தவிக்குது, வேண்டாமே வேண்டாமே இந்த ஆட்சி வேண்டாமே என்று முழக்கமிட்டனர்.
முதல்வரை காணோமே
காணோமே, காணோமே, முதலமைச்சரை காணோமே, திரும்பப்பெறு, திரும்பப் பெறு பால் விலை உயர்வை திரும்ப பெறு, டீ விலை கூடுது, காப்பி விலை கூடுது, உழைப்பாளி உட்காந்து டீ குடிக்க வக்கு இல்லை, வழி இல்லை.
பினாமி ஆட்சி
வேண்டாமே , வேண்டாமே பினாமி ஆட்சி வேண்டாமே ! தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா ! கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் பால் விலை உயர்வை கண்டிக்கிறோம் என்று முழக்கமிட்டனர்.