ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் அத்தனை அவதூறு வழக்குகளும் காலியாகும்.. ஸ்டாலின்
சென்னை: விவசாயிகள், தொழிலாளர்கள், ஐ.டி ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளைக் கேட்ட ஸ்டாலின், இன்று தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களுடன் நட்பான முறையில் குறைகளைக் கேட்டறிந்தார். அதிமுக ஆட்சியைப் போல அல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்த உடன் செய்தியாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் ஒரே கையெழுத்தில் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சி காலத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறியவும், மக்களின் குறைகளை கேட்டறியவும் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், 234 தொகுதியாக இன்று தி. நகரில் முடித்தார்.
கடந்த செப்டம்பர் 20ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து பயணத்தைத் தொடங்கிய ஸ்டாலின், தொகுதி வாரியாக பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து உரையாடினார். மக்களிடம் இருந்து இதுவரை 4, 50000 மனுக்கள் பெற்றுள்ளார் ஸ்டாலின்.
செய்தியாளர்கள் சந்திப்பு
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 233 தொகுதியையும் முடித்து இன்று 234வது தொகுதியாக தியாகராயர் நகர் சென்று அங்கு வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து ஜி.ஆர்.டி ஹோட்டலில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பாக இல்லாமல், 234 தொகுதிகளில் ஸ்டாலின் மேற்கொண்ட பயணத்தை அரைமணி நேர குறும்படமாக ஒளிபரப்பினார்கள். தொடர்ந்து தனது பயணம் கொடுத்த அனுபவங்களை விளக்கிய ஸ்டாலின், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
திமுக ஆட்சியில் குறைகள்
திமுக ஆட்சிக்கு வந்தால் இதே போல செய்தியாளர்கள் சந்திப்பு நிகழுமா என்று கேட்டதற்கு, வாரம் தோறும் செய்தியாளர்களை சந்தித்து பேசுவோம், அதற்கான முன்னோட்டம்தான் இது என்று தெரிவித்தார்.
அவதூறு வழக்குகள்
தற்போதைய ஆட்சியில் செய்தியாளர்கள் மீது போடப்படும் அவதூறு வழக்குகள் பற்றி தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், செய்தியாளர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ஒரே கையெழுத்தில் வாபஸ் பெறப்படும் என்றார்.
நமக்கு நாமே பயணம்
அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒவ்வொரு வாரமும் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினார். மேலும் அவர், ஆட்சிக்கு வந்த பின்னரும் நமக்கு நாமே பயணம் தொடரும் என்றார்.
முதல்வர் வேட்பாளர்
கட்சியின் தலைவர் கருணநிதியின் கட்டளைப் படியே நாங்கள் நடக்கிறோம் என்று கூறிய ஸ்டாலின், அவரை முன்னிறுத்திதான் நாங்கள் செயல்படுகிறோம் என்றார். இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான் என்று உறுதியாக தெரிவித்தார்.
இளைஞர் அணி செயலாளர்
கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக நீங்கள் இன்னமும் நீடிப்பது ஏன் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இளைஞர் அணியில் இணைபவர்களுக்குத்தான் வயது தேவை என்றால். கட்சியின் பொருளாளர் பதவியை விட இளைஞர் அணி செயலாளர் பதவிதான் தனக்கு விருப்பமானதாக இருக்கிறது என்று கூறிய அவர், அதில்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்றும் கூறினார்.
மதிய விருந்து
செய்தியாளர்களுக்கு சிறப்பு கல்லூரி, தனி குடியிருப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார் ஸ்டாலின். செய்தியாளர்கள் அனைவருடனும் இணைந்து சுவையான மதிய விருந்துண்டு விடை பெற்றார் ஸ்டாலின்.
இது ஒரு நட்பான நமக்கு நாமே பயணமாக அமைந்தது