புயல் பாதித்த குமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... ஆளுநரிடம் ஸ்டாலின் மனு!
ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம், குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை திமுக செயல் தலைவர்மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து வழங்கியுள்ளார். ஆளுநர் இந்த மனுவை பிரதமருக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் இன்று நேரில் சந்தித்தார். கன்னியாகுமரி புயல் பாதிப்புகள் விவகாரத்தில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை மனு ஒன்றையும்அளித்துள்ளார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
ஒகி புயல் பாதிப்புகள் குறித்து ஆளுநரிடம் விளக்கமாக எடுத்து சொல்லி இருக்கிறோம். புயல் நிவாரணத்திற்காக மத்திய, மாநில அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
மீனவர்கள் காணாமல் போனது குறித்து தலைமைச் செயலாளர், மீனவளத்துறை அமைச்சர், முதல்வர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கை சொல்கின்றனர். எத்தனை வீடுகள் புயலால் சேதமடைந்திருக்கிறது என்ற விவரம் கூட இன்னும் அரசிடம் இல்லை. நேற்று தான் ஏதோ பெயர் அளவிற்கு முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரி சென்று ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்தி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மீனவர்களையோ, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களையோ முதல்வர் பார்க்கவில்லை, இப்படி ஒரு அறிவிப்பை அவர் சென்னையில் இருந்தே வெளியிட்டிருக்கலாம் என்று மக்கள் கண்ணீர் விடுகின்றனர். எனவே ஆளுநரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரப்பர், வாழை தோட்ட விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறத்தியுள்ளோம்.
அண்டை மாநிலமான கேரளா செய்வதில் பாதியை செய்யாவிட்டாலும் அதில் 10 சதவீதத்தையாவது தமிழக அரசு செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயமாக இந்த கோரிக்கை மனுவை பிரதமருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஆளுநரும் நேற்று டெல்லி சென்று அமைச்சர்களை சந்தித்து புயல்பாதிப்பு குறித்து எடுத்துச் சொல்லி இருப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார் என்று ஸ்டாலின் கூறினார்.