பத்திரிகை துறையில் மிகச்சிறந்த ஜாம்பவான் சோ: ஸ்டாலின் புகழாரம்- அழகிரி அஞ்சலி
பத்திரிகை துறையில் மிகச்சிறந்த ஜாம்பவான் சோ என்று திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோ ராமசாமி இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவரது உயிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்துள்ளது.
பத்திரிகை, நாடகம், நடிகர், வழக்கறிஞர் என பன்முகத் துறையில் திறமை பெற்றவராக சோ விளங்கினார். துக்ளக் என்ற பிரபல அரசியல் வார இதழை கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நடத்தி வந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தனது பணியை விடாது செய்து வந்தார் சோ.
வழக்கறிஞருக்கு படித்திருந்தாலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் சோ. 14 திரைப்படங்களுக்கு கதாசிரியரான சோ, 4 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமடைந்தார் சோ.ராமசாமி.
சோ உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்களும், திரை உலக, பத்திரிகை உலக நண்பர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடு, இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சோ உடலுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர், நடிகர் ஒய்.ஜி மகேந்திரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சோவின் உடலுக்கு இன்று திமுக பொருளாளரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பத்திரிகை துறையின் மிகச்சிறந்த ஜாம்பவானாக திகழ்ந்தவர் சோ என்று புகழாரம் சூட்டினார். திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் சிறந்த பண்பாளர் என்றும் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று நேரில் வந்து சோ உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகச்சிறந்த அறிவாளி சோ என்று கூறினார். தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அரசியல் சாணக்கியராக திகழ்ந்தவர் என்று அழகிரி கூறினார்.