தமிழகத்தில் பாஜக ஆட்சியா? அதிமுக ஆட்சியா?... சட்டசபை பேச்சு நீக்கம்... ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்று சட்டசபையில் தான் பேசிய பேச்சுகள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்று சட்டசபையில் தான் பேசிய பேச்சுகள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயபுரம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் : இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் ஒரு முக்கியமான பிரச்னையை நான் எழுப்பினேன். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக ஒரு யாத்திரையை திட்டமிட்டு அந்தப் பணியிலே இன்று நெல்லை மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.
இது தவறு, இதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் ஜாதிக் கலவரங்கள் நிச்சயமாக உருவாகும் என்கிற எண்ணத்தோடு பல்வேறு அமைப்புகளை சார்ந்திருக்கும் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா போன்றோர் எதிர்த்து குரல் கொடுத்ததால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் கைது செய்யப்பட்டது தவறு என்று சட்டசபையில் நான் குரல் எழுப்பினேன். அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற யாத்திரைக்கு அதிலும் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று விஎச்பி இந்த யாத்திரையை தொடங்கியுள்ளது.
எனவே இது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் இதற்கு எப்படி நெல்லை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார் என்பது வியப்பாக இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நெல்லை மாவட்டத்தில் திடீரென நேற்று 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள். 144 தடை போட்டால் எந்த ஊர்வலம், போராட்டம், மறியல் நடத்தக் கூடாது.
கலவரத்தைத் தூண்டும் வகையில் திட்டமிட்டு யாத்திரை நடத்துபவர்களுக்கு அனுமதி உண்டாம். ஆனால் அது தவறு என்று குரல் கொடுப்பவர்களுக்கு அனுமதியில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பித்த ஆட்சித் தலைவர் மற்றும் காவல்அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாஜகவிற்கு தமிழக அரசு துதி பாடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் வந்திருக்கிறது என்றும் சட்டசபையில் பேசினேன். அத்தனையும் சட்டசபையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
விளக்கம் சொல்வதாக எழுந்து பேசிய முதல்வர் பழனிசாமி பாஜகவிற்கு ஜால்ரா போடும் வகையில் பேசினார். நாங்கள் தொடர்ந்து ரத யாத்திரைக்கு தடை போட வேண்டும் 144 தடை உத்தரவை உள்நோக்கத்துடன் போட்டிருக்கும் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
எங்களது கோரிக்கையை ஏற்காமல் சபாநாயகர் வெளியேற்றிவிட்டார், வெளியேற்றப்பட்ட பின்னர் வேறு வழியில்லாமல் நாங்கள் கோட்டைக்கு முன்னால் மறியலில் ஈடுபட்டோம். அதனால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.