குன்னூரில் சில்வர் ஓக் மரங்களை வெட்டி கொள்ளையடிக்க அமைச்சர்கள் முயற்சி: ஸ்டாலின்
நீலகிரி மாவட்டத்தில் டேன் டீ தொழிற்சாலைக்கு சொந்தமான சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த
குன்னூர் : தமிழக அரசின் டேன் டீ தொழிற்சாலைக்கு சொந்தமான சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் டைகர் ஹில் அருகே அரசுக்கு சொந்தமான டேன் டீ தேயிலை தொழிற்சாலையை எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது தேயிலைத் தொழிலாளர்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தாயகம் திரும்பிய தமிழருக்காக
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியின் போது தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக அரசு தேயிலை தோட்ட கழகம் நீலகிரி, வால்பாறை போன்ற பகுதியில் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தேயிலை தொழிற்சாலையை கண்டு கொள்ளவில்லை.
மரங்களை வெட்ட ஒப்பந்தங்கள்
இதனால் தேயிலை தொழிற்சாலை நலிவடைந்த நிலையில் உள்ளது. வனத்துறை அமைச்சர், மற்றும் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு கூடலூர் டேன் டீ தொழிற்சாலைக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக மரங்களுக்கு எண் போடப்பட்டுள்ளது.
சில்வர் ஓக் மரம் வெட்டுவது தடுப்பு
மரங்களை வெட்டும் பணியை தடுக்க முயற்சி எடுத்ததால் மரங்கள் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. டேன் டீ தொழிற்சாலை மரங்களை வெட்டுவது குறித்து அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும். தேயிலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிய கூலியை கொடுப்பது இல்லை.
மக்கள் பிரச்சனைக்கு தீர்வு எப்போது?
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் முழு உண்மையும் வெளிவரும். அ.தி.மு.க.வினர் தங்களது பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. இவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என புரிய வில்லை. விரைவில் இதற்கு விடை கிடைக்கும் என்று தெரிவித்தார்.