அறவழியில் போராடியவர்களை தாக்கியது ஏன்.. போலீஸ் தாக்குதல் குறித்து சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் பதில் தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு வேண்டும் என்று அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது ஏன் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஒரு வார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரை, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், மாணவிகள், இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறைக்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின், போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறி நடந்து கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கான பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்த ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் சட்டத்திற்காக டெல்லி சென்று நடவடிக்கை எடுத்த முதல்வர் ஓபிஎஸ்சுக்கு நன்றி தெரிவித்தார்.