என்னாச்சு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை முயற்சி... மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி?
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கிடப்பிலேயே இருப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 -16ம் நிதியாண்டில் மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கிடப்பிலேயே இருப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு உலக தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் மூன்று நிதி நிலை அறிக்கைகள் கடந்து சென்றுவிட்ட நிலையிலும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த விளக்க முடியாத தாமதம், தமிழகத்திற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் கூட மத்திய பா.ஜ.க. அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
ஆய்வு முடிந்துவிட்டது
இந்த ஐந்து இடங்களிலும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பிவிட்டது. அதன்பிறகு, தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.
எய்ம்ஸ்க்கான இடம் இறுதி செய்யப்படவில்லை
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், "2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்", என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது. ஆனால், இன்றுவரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய-மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை.
செயலிழந்து நிற்கும் அதிமுக
"மாநில நலன்களுக்காக மத்திய அரசுடன் ஒத்துப்போகிறோம்", என்று அரசு செலவில் விழா நடத்தி, வீண்தம்பட்டம் அடித்து வரும் அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வர முடியாமல் செயலிழந்து நிற்கிறது. தமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் இங்குள்ள அ.தி.மு.க. அரசுக்கோ, அமைச்சருக்கோ சிறிதும் அக்கறையில்லை என்பது இதன்மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அக்கறையில்லை என்பதை காட்டுகிறது
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு வெளியிட்ட 110 விதியின் கீழான அறிவிப்புகள் போல், மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இன்றுவரை அமலுக்கு வராமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் நலன் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கும் எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திமுக ஒத்துழைக்கும்
நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.விற்கு உள்ள பலத்தை பயன்படுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை உடனே செயல்படுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிக்கு ராஜ்யசபாவில் உள்ள தி.மு.க. உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.