என்ன இருந்தாலும் மாணவர்களுடனான நிகழ்ச்சிகள் நெஞ்சை விட்டு அகலுவதில்லை- மு.க.ஸ்டாலின் பூரிப்பு
கோவை மாவட்டத்தில் அன்னூரில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டது நெஞ்சை விட்டு அகலாத ஒன்று என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்னூர்: கோவை மாவட்டத்தில் அன்னூரில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நெஞ்சை விட்டு அகலாததாக இருப்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கோவை அன்னூரில் தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு, கவிதை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.
நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், எத்தனையோ நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக, எழுச்சியாக கண்களை கவரக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும், எல்லா நிகழ்ச்சிகளை விடவும் என்றைக்கும் என் நெஞ்சத்தை விட்டு அகலாத நிகழ்ச்சி இருக்கிறது என்றால், அது இதுபோன்ற மாணவர்களை அழைத்து, அவர்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள்தான். இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தான் உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 19 ஆயிரத்து 482 மாணவ, மாணவியருக்கு 7 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தி மொழி திணிக்கப்பட்ட நேரத்தில் அதனை எதிர்த்து பல தலைவர்கள் போராடினாலும் அதில் முழு வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள். அண்மையில் கூட நம்முடைய இனத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டை மீட்க மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய "மெரினா புரட்சி"யை இந்த நாடு என்றைக்கும் மறக்காது. அதுபோன்று தமிழகத்தின் சமூக - பொருளாதார முன்னேற்றத்துக்கும், மொழி - பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்கவும், மாணவர்களும் - இளைஞர்களும் என்றைக்கும் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.