கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா, இல்லையா? - இது மு.க.ஸ்டாலின் விளக்கம்!
மருத்துவர்கள் அனுமதி அளித்தால் திமுக தலைவர் கருணாநிதி ஜுன் 3ம் தேதி தொண்டர்களை சந்திப்பார் என்ற அந்தக் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை பொறுத்து மருத்தவர்களின் அனுமதியை பெற்று வைரவிழாவில் பங்கேற்பார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர், தொண்டர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. இந்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி, கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
வைரவிழா
அதுமட்டுமல்லாமல் கருணாநிதி எம்.எல்.ஏவாக பதவியேற்று, 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்காக வைர விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நிகழ்வுகளையும் சேர்த்து, பிரம்மாண்ட விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ் பாரதி
இந்த விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்று அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.
மறுத்த ஸ்டாலின்
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின், தலைவர் கருணாநிதி வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிவித்தார். வைர விழா நிகழ்ச்சிக்காக பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருவதாகவும் கூறினார்.
அதிர்ச்சி, கண்டனம்
நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாதது அதிர்ச்சியளிப்பதாகவும், நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து திமுக சார்பில் கண்டன கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். நேற்று நீட் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டதற்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.