காவிரி வாரியத்திற்காக உணர்வுப்பூர்வமாக நடந்த மனிதசங்கிலி போராட்டம்... ஸ்டாலின் வெற்றி அறிவிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடந்த மனிதசங்கிலி போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடந்த மனிதசங்கிலி போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனிதசங்கிலி போராட்டம் உணர்வுப் பூர்வமாக நடைபெற்றதாகவும்,காவிரி வாரியத்திற்காக மக்கள் எழுச்சியுடன் போராடியதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மனிதசங்கிலி போராட்டம் முடிந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். இனியும் கால தாமதம் செய்யாமல் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் நடந்த மனிதசங்கிலி போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைமையில் நடந்த மனித சங்கிலியில் தோழமைக்கட்சிகள், விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்றனர். கட்சிக்கு அப்பாற்பட்டு நடந்த மனித சங்கிலி போராட்டம் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. மனிதசங்கிலி போராட்டம் உணர்வுப்பூர்வமாக மாறி மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்களின் மனிதசங்கிலி போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. பாஜக தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை என்றால் தான் ஆச்சரியம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.