எத்தனை எத்தனை ஊழல்.. லேப்டாப்பைக் கூட விடவில்லை இந்த அதிமுக அரசு... மு.க.ஸ்டாலின் விளாசல்
திருச்சி: ஸ்ரீரங்கம் என்ற வரலாற்றுப் பெயருக்கு களங்கம் விளைவித்தவர், கெட்ட பெயரைத் தேடித் தந்தவர் ஜெயலலிதா. இந்த ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள். லேப்டாப் திட்டத்திலும் கூட பெரும் ஊழல் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆனந்த்தை ஆதரித்து கடந்த 3 தினங்களாக தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். கடைசி நாளான நேற்று கிளிக்கூட்டில் ஆரம்பித்து பல்வேறு இடங்களில் வேனில் பிரசாரம் செய்தார். பின்னர் மாலை ஸ்ரீரங்கம் பழைய தாலுகா அலுவலகம் முன் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
ஸ்டாலின் தனது இறுதிக் கட்டப் பிரசாரத்தின்போது பேசியதாவது:
வரலாறுக்கு களங்கம்
ஸ்ரீரங்கத்திற்கு பெரிய வரலாறு உண்டு. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா மட்டுமில்லை உலக நாடுகளில் இருந்து பலர் வந்து போகும் சரித்திரத்தை பெற்றது ஸ்ரீரங்கம் கோயில். தென்னிந்தியாவிலேயே பெரிய ராஜகோபுரம் இதுதான். அப்படிப்பட்ட புகழ்மிக்க கோயிலுக்கு கருப்பு பெயரை தேடி தந்தவர்தான் ஜெயலலிதா.
பாடம் புகட்ட வேண்டும்
ஜெயலலிதாவின் 4 ஆண்டு கால ஆட்சிக்கு பாடம் புகட்ட நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். 2011ல் நடந்த தேர்தலில் எம்எல்ஏ வேட்பாளராக நின்றபோது ஜெயலலிதா, நிறைவேற்றுவதாக கூறி பல உறுதி மொழிகளை வழங்கி இருந்தார்.
சொன்னதைச் செய்தாரா ஜெயலலிதா
அடிமனை பிரச்னை, நிலம், வீட்டுமனைகளை வாங்கவோ விற்கவோ முடியாது. இந்த சூழலில் அன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் நான் தான் முதல்வர், கோட்டைக்கு சென்று நாற்காலியில் உட்கார்ந்து முதல் கையெழுத்தாக அடிமனை பிரச்னைக்கு தான் கையெழுத்து போடுவேன் என்றார். நிறைவேற்றினாரா (கூட்டத்தில் இருந்து இல்லை). அது போல் ஸ்ரீரங்கத்தில் பல பகுதிக ளில் உறுதிமொழி கொடுத்ததை நிறைவேற்றவில்லை.
என்ன ஆயிற்று அறிவித்த திட்டங்கள்
கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக முதல்வராக இருந்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியை பயன்படுத்தி பலஅறிவிப்பு திட்டங்களை பல ஆயிரம் கோடி மதிப்பில் அறிவித்தார். 2014&15ம் ஆண்டிற்கான அறிவிப்பில் 215 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து ரூ.31,208 கோடியில் நிறைவேற்றப்படும் என்றார். அந்த திட்டங்கள் என்ன ஆயிற்று.
பினாமி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்
கடந்த 2011&12ல் ரூ.6,227 கோடி, 2012&13ல் 48,262 கோடி, 2013&14ல் 41,801 கோடி, 2014&15ல் 31,210 கோடி என மொத்தம் ரூ.1,27,500 கோடி மதிப்பீட்டு தொகைகான அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால் பினாமி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ள நிதிநிலை அறிக்கையில் ரூ.1,27,389 கோடியில் திட்டம் துவங்கி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்போது 110 விதி யின் கீழ் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகள் என்னவாயிற்று. அதற்காகதான் வெள்ளை அறிக்கை வெளியிட தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதற்கெடுத்தாலும் லஞ்சம்
தமிழகத்தில் புதிய புதிய கார், பைக் நிறுவனங்கள் துவங்குவதற்கு போக்குவரத்து துறை அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். ஆனால் அவைகள் தடுத்து நிறுத்தப்படுகிறது. உரிமம் பெற வேண்டுமானால் இருசக்கர வாகனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடு க்க வேண்டும். நான்கு சக்கர வாகன நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் தரவேண்டும். எங்கும் லஞ்சம் ஊழல் அக்கிரமங்கள் நடந்துவருகிறது.
லேப்டாப் திட்டத்திலும் ஊழல்
லேப்டாப் திட்டத்திலும் கொள்ளை நடந்துள்ளது. அந்த திட்டத்தை குறைகூறவில்லை. இந்த திட்டத்தை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளது. அரசு நிறுவனமான எல்காட் மூலம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்படும் என கூறி டெண்டர் விடப்பட்டது. விதிமுறைகளை காரணம் காட்டி குறைகளை சுட்டிகாட்டிய எல்காட் நிறுவனம் காரணங்களை ஆட்சியாளர்கள் ஏற்று கொள்ளவில்லை. தனியாரிடம் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு லேப்டாப்பையும் ரூ.1,500 அதிகம் கொடுத்து வாங்கப்பட்டதில் பல்லாயிரம் கோடியில் ஊழல் ஏற்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம் எங்கே
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும் என்றனர். அதற்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்ததால் ஆட்சியில் அமர்ந்தனர். ஆனால் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டதா, இல்லை. மாறாக, மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கியதால் மின்வாரியத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 8.2.15 அன்று வெளிவந்த நாளிதழில் 2013&14ல் ரூ.30,561 கோடிக்கு மின்சாரம் வெளி மாநிலங்களில் வாங்கப்பட்டுள்ளது. அதில் பலகோடி ஊழல் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
தாது மணல் கொள்ளை
நாட்டின் பாதுகாப்பில் உள்ள கனிம பொருளை தனியார் நிறுவனம் எடுக்கவோ, கையாளவோ கூடாது என மத்திய அரசு சட்டம் கூறுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் தாது மணல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏன் என்றால் வி.வி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர். பெங்களூர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள தீர்ப்பில் வி.வி. மினரல்ஸ் பற்றி கூறப்பட்டுள்ளது. உடனடியாக தெம்பு இருந்தால் சீரான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு மாபெரும் வெற்றியை தேடி தரவேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.