ஜல்லிக்கட்டு... என்ன 'டபுள் ஆக்ட்' கொடுக்கிறீங்களா?.. பாஜக அரசை விளாசும் மு.க.ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை மீறிய பாஜக அரசு ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் உச்சநீதிமன்றத்தை சாக்கு சொல்கிறது என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சென்னைக்கு வரும் போதெல்லாம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று பேசி வந்த நிலையில், நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அனில் மாதவ், ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னரே எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, ஒத்துக் கொண்ட மத்திய அரசு, பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தை சாக்கு சொல்வது என்பது பாஜகவின் இரட்டை வேடத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.