தமிழக பட்ஜெட் ஒரு வெற்று அறிக்கை... கடன் சுமை உயர்ந்திருப்பது வெட்கட்கேடு: மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பட்ஜெட்டை, வெற்று அறிக்கை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் சாடியுள்ளார்.
2016-17ம் ஆண்டிற்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவையில் சமர்பித்தார். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை என்று கூறினார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றவை அனைத்தும், வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்று குற்றம்சாட்டினார்.
தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. தமிழக அரசின் காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மாறிவிட்டது.
விவசாயிகளின் வருவாய் 3 மடங்கு அதிகரிக்கப்படும் என அரசு கூறியிருந்தது. ஆனால் உண்மையிலேயே தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான் நீடிப்பதாக கூறினார்.
ஏற்கனவே அரசு அறிவித்த மோனோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் ஏதும் இல்லை . மேலும் சென்னையில் அறிவுசார் பூங்கா அமைக்கம் திட்டம் பற்றியும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை. தமிழகத்தை அமைதிப் பூங்காவாக நிலைநாட்டுவோம் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில், சமீப காலமாக நடக்கின்ற சம்பவங்கள் முற்றிலும் மாறாக உள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இளைஞர் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, விவசாயிகள் கோரிக்கை குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என்றும், விவசாயிகளின் வருவாய் 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு என்னவாயிற்று என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான் நீடிக்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் மீதான கடனை, இந்த அரசு எப்படி அடைக்கப்போகிறார்கள் என்று கேட்ட ஸ்டாலின், இந்த நிதி நிலை அறிக்கை வெற்று அறிக்கையாக மட்டுமே உள்ளது நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான திட்டம் ஏதும் பட்ஜெட்டில் இல்லை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.