கடலில் எவ்வளவு எண்ணெய் கலந்திருக்குன்னே அமைச்சருக்கு தெரியல.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
எண்ணூர் கடலில் எவ்வளவு எண்ணெய் கலந்திருக்கின்றது என்பதே அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியவில்லை என்று மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: எண்ணூரில் கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எண்ணூர் பகுதியில் பாதிப்புக்குள்ள மீனவர்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கடலில் எண்ணெய் பரவியுள்ளதால் மீனவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இடைக்கால நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரினார்.
கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டியதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்டு பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை பெறும் வகையில் வழக்குகளை நடத்த வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை எண்ணெய் பரவியுள்ளதால் நெம்மேலியில் செயல்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
கப்பல் மோதிய விபத்தில் கடலில் எவ்வளவு கச்சா எண்ணெய் கலந்துள்ளது என்ற விவரம் கூட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.