மின்சாரம், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
மின்சாரம், குடிநீர், பால் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரம், பால், குடிநீர், உணவு தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மருத்துவ முகாம்களை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
2வது நாளாக ஸ்டாலின் ஆய்வு
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் நேரு கல்யாண மண்டபம், ஜி.கே.எம். காலணி, ராஜேஸ்வரி மஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வர்தா புயல் தாக்குதலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் முழுமையாக முடங்கியுள்ள நிலையில், புயலால் வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தவும், மின் கம்பங்களை சீரமைக்கவும், அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்
மீட்புப் பணியில் திமுக
தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், திமுக சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவச மருத்துவ முகாம்களை இன்று தொடங்கி வைத்தேன். மேலும், என்னுடைய அழைப்பை ஏற்று, திமுக நிர்வாகிகள், இளைஞரணியினர் ஆகியோர் மீட்புப் பணி மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வருவதை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
போர்க்கால நடவடிக்கை
மின் தட்டுப்பாடு, பால், குடிநீர், உணவு தட்டுப்பாடு நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. அதையும் உடனடியாக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உடனடியாக மாநில அரசு குறிப்பாக தமிழகத்தின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசோடு தொடர்புகொண்டு நிவாரணப் பணிகளுக்காக 10,000 கோடி ரூபாய் நிதியை பெற வேண்டும்.