ஜல்லிக்கட்டு போராட்டம்.. சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறுவது உளவுத்துறையின் தோல்வி - ஸ்டாலின்
சென்னை, நடுக்குப்பம் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக முதல்வர் கூறுவது உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நடுக்குப்பம் பகுதியில் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு செய்தார், மேலும் சமீபத்தில் போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே நடந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், சமூக விரோதிகள், தேசவிரோதிகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் சமூக விரோதிகளை கைது செய்யாதது அரசின் கையாலாகத்தனத்தை காட்டுகிறது. பெண் போலீஸ் ஒருவர் குடிசைக்கு தீ வைத்ததை அனைவரும் பார்த்தனர். காவல்துறையே வீடு, ஆட்டோக்களுக்கு தீ வைத்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது.
அரசின் கவனத்தை ஈர்க்க மீனவர்களை திரட்டி 30 ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். பொது மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி அரசை வலியுறுத்துவோம். தடியடிக்கு பயந்து வந்த மாணவர்களுக்கு உதவிய மீனவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்குப்பம் மீனவர்கள் மிகந்த சோகத்திலும் அதிரச்சியில் உள்ளனர். அப்பாவி மீனவர்களை காவல்துறை கைது செய்வது தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.