தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப்பட்டதாக கூறுவதா... சதானந்த கெளடாவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டில் கன்னடர் மீது வன்முறை நடந்ததாக கூறிய மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அளித்த பேட்டியில், "கர்நாடகத்தைச் சேர்ந்த எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை; மாறாக தமிழ் நாட்டில்தான் கன்னடர் மீது திட்டமிட்டு வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டது. அதனால் ஆத்திர மடைந்த கன்னடர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்" என்று சொல்லியிருக்கிறாரே?
கர்நாடக மானாலும், தமிழ்நாடு ஆனாலும் இதுபோன்ற வன்முறைகள் நடைபெறக் கூடாது என்று தடுக்க வேண்டியவர், சொந்த மாநில அரசியல் காரணங்களுக்காக ஒருதலைப்பட்சமாகக் கருத்து தெரிவிப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கடுமையான கண்டனத்திற்குரிய பேட்டி இது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் முயற்சி இது. மத்தியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் இதுபோன்ற மாநிலங்களுக்கிடையே ஆன பிரச்சினைகளில் ஒருசார்பான நிலை எடுத்து கருத்துக் கூறுவது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல;
மேலும் அரசியல் சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சதானந்த கவுடா சட்டத் துறை அமைச்சராகவே ஏற்கனவே இருந்தவர். கர்நாடகத்தில்தான் முதன் முதலாக சந்தோஷ் என்ற இளைஞரைத் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.