ஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ராமானுஜரைப் பற்றிய தொடருக்கு வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் கருணாநிதி.
சென்னை: ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த தொடருக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. நாத்திக கருத்துக்களை புரட்சிகரமாக எழுதிய கருணாநிதியின் பேனா, ஆன்மீக கருத்துக்களை பரப்பிய ராமானுஜரின் வரலாற்றினை எழுதியது.
11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து சமய சீர்திருத்தவாதியாகவும், வைணவ சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ராமானுஜர். விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவர் ஸ்ரீராமானுஜர். ஓம் நமோ நாராயணாயா என்று உச்சரித்து ஏழை எளிய மக்களுக்கு போதித்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஆன்மீகவாதியான ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை எழுத கருணாநிதியின் நாத்தீக பேனா தலைவணங்கியது.
ராமானுஜர் நெடுந்தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜரின் பிறப்பு தொடங்கி அவரது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தன்னுடைய பாணியில் அழகிய தமிழில் வசனங்களை எழுதினார் கருணாநிதி .
கருணாநிதி வசனம்
மதத்திற்குள் ராமானுஜர் ஏற்படுத்திய புரட்சி, தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்தது, அதனால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அதை அவர் எதிர்கொண்ட முறை இவை பற்றியெல்லாம் பேசியவர் கருணாநிதி. இதன் காரணமாகவே ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடருக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
கொள்கை உறுதி
கருணாநிதி தனது கொள்கையில் இருந்து மாறிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கும் சரியான பதிலை சொன்னார் கருணாநிதி. குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் எல்லாம் சிறந்த ஆன்மிகவாதிகள் என்றபோதிலும், அவர்களுடைய தமிழுக்காகவும் சாதி, மதப் புரட்சிகளுக்காகவும் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை.
ராமானுஜர் வரலாறு
கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்துவைத்தேன். எனவே, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று கூறியவர் கருணாநிதி.
கலைஞர் தொலைக்காட்சி
இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாக பொருள் கொள்ளக்கூடாது என்றும் கருணாநிதி தெரிவித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
கருணாநிதியை சந்தித்த அதிகாரிகள்
ராமானுஜர் தொடரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கோரி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்தித்து அனுமதி கோரினர். தொடரை சொந்த செலவில் ரீமேக் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தயாராக இருப்பதாகவும் ராமானுஜர் தொடர் உரிமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு சொந்தமானது என்பதாலேயே தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்றுச் சென்றனர்.
கருணாநிதி எழுத்துக்கு வயதில்லை
சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவாக திகழ்ந்தவர் கருணாநிதி. 90 வயதிற்கு மேலும் கை நடுக்கம் இன்றி எழுதினார். அவரது கையெழுத்து அபூர்வமானது. முரசொலி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும் பல நாத்திக கருத்துக்களை எழுதியுள்ளார். நாத்திகராக பல கருத்துக்களை பேசினாலும் ராமானுஜர் காவியம் கருணாநிதியின் பெருமையை பேசும் என்பதில் ஐயமில்லை.