திராவிடர் இயக்க வழக்கப்படி முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராஜன் உடல் நல்லடக்கம்
நடராஜன் உடல் அவரது விருப்பப்படியே முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நல்லடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video
தஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் நடராஜன் பாதிக்கப்பட்டார். அப்போது அவருடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால், உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு கடந்த 16ஆம் தேதியன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
குளோபல் மருத்துவமனையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.
நடராஜன் உடல் பெசன்ட் நகர் பாரி தெருவில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடராஜன் உடலுக்கு வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடராஜன் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு நேற்றிவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தனது கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா பரோலில் நேற்று தஞ்சைக்கு வந்தடைந்தார். இன்று காலை முதலே கண்ணீர் மல்க கணவர் நடராஜன் உடல் அருகே அமர்ந்திருந்தார்.
நடராஜன் உடலுக்கு உறவினர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். விசிக தலைவர் திருமாவளவன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா சகோதரர் திவாகரன், குடும்ப பாரம்பரிய முறைப்படி நடராஜன் உடல் எரியூட்டப்படாது என்று கூறினார். திராவிட இயக்க பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது ஆசைப்படியே முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறினார்.
அதன்படி மாலை 4.30 மணியளவில் நடராஜன் உடல் இறுதி யாத்திரை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜன் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். திராவிட இயக்க வழக்கப்படி நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.