தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடமா.. அப்படியெல்லாம் இல்லையே.. பலே நடராஜன்!
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவால் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார் எம்.நடராஜன்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை என்றும் புதிய தலைவர்கள் யாரும் பிறக்கவேண்டியதில்லை, தலைவர்கள் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன்.
ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால், தீவிர அரசியலில் இருந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாகச் செயல்பட முடியாமல் இருக்கிறார். இந்த இரண்டு தலைவர்களும் அரசியலில் இல்லாத நிலையில், தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் உள்ளதாக கருதப்படுகிறது.
அதெல்லாம் இல்லை
ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால், தமிழகத்தில் அரசியல் களத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை என்று புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நேருவுக்குப் பிறகு என்னாச்சு
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடராஜன், "நேருவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் வரும் என்று பலர் கூறிவந்தனர். ஆனால் லால் பகதூர் சாஸ்திரி என்ற தலைவர் வந்தார்.
இந்திராவுக்குப் பிறகு என்ன நடந்தது
அதே போல இந்திரா காந்திக்கு பிறகு யாரும் காங்கிரசில் இல்லை என்று பேசப்பட்டது. ஆனால் எங்கிருந்தோ ராஜீவ் காந்தி வந்து ஆட்சி செய்தார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு நடந்தது என்ன
அதேபோல், தமிழகத்திலும் காமராஜருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெற்றிடம் ஏற்படும் என்று பேசப்பட்டது. அடுத்தடுத்த தலைவர்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.
இங்கேயே இருக்கிறார்கள்
புதிய தலைவர்கள் இனி பிறக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். அது மக்களுக்கு தெரியும்" என கூறினார் நடராஜன்.