ஐஐடி மெட்ராஸ் எம்டெக் மாணவர் மர்ம சாவு.. விடுதி அறைக்குள் சடலமாக கண்டெடுப்பு
சென்னை: ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் எம்டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் ஒருவர் ஹாஸ்டலில் தூக்குபோட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த என்.நாகேந்திர குமார் ரெட்டி (23) என்ற அந்த மாணவர், விடுதியில் தங்கியிருந்து, எம்டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஐஐடிக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நேரத்தில், தனது சொந்த ஊர் சென்றிருந்த நாகேந்திர குமார், திங்கள்கிழமை காலையில் ஹாஸ்டல் திரும்பியுள்ளார்.
ஆனால், நேற்று, மதியம் சாப்பாடு மற்றும் இரவு சாப்பாடு நேரத்திற்கு, நாகேந்திரகுமார் செல்லவில்லை. சந்தேகமடைந்த அவரின் நண்பர்கள், ஹாஸ்டல் அறைக்கு சென்று பார்த்தபோது, அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே, சாவி துவாரத்தின் வழியே உள்ளே பார்த்துள்ளனர். அங்கு, நாகேந்திரகுமார் உடல், தூக்குமாட்டிய நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டனர். சம்பவத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாணவரின் லேப்டாப்பை கைப்பற்றி காவல்துறை ஆய்வு செய்துவருகிறது. தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாணவன் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்துள்ளார்.