ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்த மதனின் தாய்: பதில் அளிக்க போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கங்கையில் சமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான தயாரிப்பாளர் மதனின் தாயார் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) குறித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கங்கையில் சமாதியாகப் போவதாக சினிமா பட தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். அவர் மாயமான தகவல் கடந்த 29ம் தேதி வெளியானது. ஆனால் மதனுக்கு என்ன ஆனது, அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.
அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு அவரின் தாய் மற்றும் இரண்டு மனைவிகளும் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே மதன் ஒரு இளம்பெண்ணுடன், நிறைய பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதனின் தாயார் தங்கம், தனது மகனின் நிலை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறினார். இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
கடந்த 29ம் தேதி மாயமான மதனை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தங்கம் தனது மனுவில் தெரிவித்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து வரும் 8ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.