நள்ளிரவில் புதிய மடாதிபதிக்கு சரமாரி அடி, உதை.. கும்பகோணம் வீர சைவ மடத்தில் பரபரப்பு
புதிய மடாதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
Recommended Video
கும்பகோணம்: கும்பகோணம் வீர சைவ மடத்திற்குள் நடுராத்திரி மடாதிபதிகள் ஒருத்தருக்கொருத்தர் பலமாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட மடாதிபதி ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதில், புதிய மடாதிபதி பலத்த காயமடைந்தார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையானது கும்பகோணம் வீர சைவ மடம் ஆகும். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மடத்தை நிர்வகித்து வருகின்றனர். இந்த மடத்தில் ஸ்ரீ ல ஸ்ரீ நீலகண்ட சாரங்க தேவேந்திர மகா சுவாமிகள் மடாதிபதியாக இருந்துவந்தார்.
பல கோடி ரூபாய் மோசடி
ஆனால் ஆன்மீக பயணமாக கடந்த 16-ம் தேதி கர்நாடகாவுக்கு சென்றுவிட்டார். தற்போது அவர் மடத்தில் இல்லாத நிலையில், நேற்று காலை மடத்திற்கு வந்த நிர்வாக கமிட்டியினர் அவர் மீது பல கோடி ரூபாய் மோசடி உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகளை சொன்னார்கள்.
பட்டம் சூட்டினார்
அதனால் அவருக்கு பதிலாக ஸ்ரீ முருக தேசிக சுவாமிகளை, புதிய மடாதிபதியை தேர்வு செய்வதாக திடீரென அறிவித்தனர். இதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சித்ரதுர்கா மடத்தின் பெரிய மடாதிபதி மகா சுவாமிகள், புதிய மடாதிபதிக்கு பட்டம் சூட்டி ஆசி வழங்கி விட்டு சென்றார்.
சரமாரி உதை
இந்த விஷயம் கேள்விப்பட்டு, ஸ்ரீ ல ஸ்ரீ நீலகண்ட சுவாமிகள் நேற்றிரவு திடீரென தனது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோரை கூப்பிட்டு கொண்டு, மடத்திற்கு சென்றார். மடம் பூட்டப்பட்டு இருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்த புதிய மடாதிபதியையும், அவரது உதவியாளர்களையும் சரமாரியாக தாக்கினர்.
போலீசார் குவிப்பு
இந்த தாக்குதலில் புதிய மடாதிபதி உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இப்போது கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீண்டும் மோதல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போதும் மடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் அடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீலகண்ட தேசிக பரமாச்சாரியார் தம்மை பதவி நீக்கம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தாமே மடாதிபதியாக தொடர்வதாகவும் தெரிவித்தார். பாரம்பரியம் வாய்ந்த மடத்துக்குள் நள்ளிரவில் இப்படி மடாதிபதிகள் அடித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.