எப்பப் பார்த்தாலும் கிளிசரினும்...சண்டையும்- ”சீரியல்” பெண்களை பாசிட்டிவா மாத்துங்கப்பா!
சென்னை: பெண்கள்....ஆண்களுக்கு மேலான பொறுப்புகளை சுமந்தும் திறன் படைத்தவர்கள்...பொறுமைசாலிகள் என்றாலும் அவர்களை பெரும்பாலும் தொலைக்காட்சி சீரியல்கள் கொடூரமான குணம் படைத்தவர்களாகவே காட்டி வருகின்றது.
ஒருசில பேரே நிஜத்தில் அது போன்ற குணாதிசயம் படைத்தவர்களாக இருப்பார்களே தவிர பெரும்பாலான பெண்கள் குடும்பம், வேலை என்று சுழலில் சிக்கித்தான் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.
எப்போதுமே அழுகை, குரூரம், கொடுமை மட்டுமே பெண்களின் குணமல்ல. சில அழகான கதாப்பாத்திரங்கள் அதனை அழகாக எடுத்துக் காட்டியும் உள்ளன.
இயல்புதான் அழகு:
எக்ஸ்ட்ரீம் இமாஜினேஷன் என்ற மாய வலையில் சிக்கித் தவிக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மத்தியில் எது மாதிரியான பெண்கள் சார்ந்த கதாப்பாத்திரங்கள் உண்மையிலே சீரியல்களில் ரசிக்கும்படியாய் அமைந்தது என்பதை இங்கே பார்ப்போம். மேலும், அதுபோன்ற பாசிட்டிவ் கேரக்டர்களையே சீரியல் பார்ப்பவர்களும் பின்பற்றினால் நல்லதுதான்.
”ப்ரியமானவள்” உமா:
இப்படி ஒரு மாமியார் நமக்கு அமைய மாட்டாரா என்று பெண்களே ஏங்கும் படியான கதாப்பாத்திர வடிவமைப்பு. அதனை சரியாக செய்து வருகிறார் நடிகை பிரவீணா. நான்கு மகன்களிம் தாயாக, அட்டகாசம் செய்யும் அவந்திகா என்னும் மருமகளை அரவணைப்பவளாக, சம்மந்தி வீட்டார் கூட மெச்சும் பெண்ணாக அருமையான கதாப்பாத்திர வடிவமைப்பு.
”கோலங்கள்” அபி:
கிட்டதட்ட 5 வருடங்களைத் தாண்டி ஓடிய இந்த சீரியலின் ஆணிவேரே "அபிநயா" என்னும் அபிதான். கணவனின் குடும்பம் செய்யும் அனைத்து இம்சைகளையும் தாங்கிக் கொண்டு, ஒருகட்டத்தில் கணவனைப் பிரிந்து, ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை சந்திக்கும் ஒரு பெண்ணின் கதை. அமைதியான பேச்சு, ஒவ்வொரு பிரச்சினையையும் புத்திசாலித்தனத்தோடு அணுகும் விதம் என்று இந்த கதாப்பாத்திரமும் ஒரு தூண்டுகோலாக பெண்களுக்கு அமைந்தது. அதில் பொருந்திப் போய் அபியாகவே மாறியிருப்பார் நடிகை தேவயானி.
”தென்றல்” துளசி:
கொடுமைக்கார சித்தி பிடியில் இருந்து பாட்டியின் வளர்ப்பால் தப்பி, தந்தையின் எரிச்சலைக் கூட ஒரு கட்டத்தில் அன்பாய் மாற்றி, அன்புக்கினிய இரண்டு தோழிகளின் அரவணைப்பாலும், ஆசையாய் காதலித்து மணம் புரிந்த கணவனின் குணத்தாலும் வாழ்க்கையில் உயரும் ஒரு பெண்ணின் கதை. பல்வேறு இடையூறுகள், பிரச்சினைகளையும் தாண்டி படிப்பினை முடிக்கும் துளசி பாத்திரம் படிப்பினைக் கண்டு அச்சப் படுபவர்களுக்கு ஒரு வெளிச்ச விதை தூவியது.துளசியாக நடிகை ஸ்ருதி உருட்டும் விழிகளும், வரிசை பற்களுமாக அழகாக, இயல்பாக நடித்திருந்தார்.
பாசிட்டிவா யோசிங்கப்பா:
மொத்தத்தில் அழுகை என்பது கோழைத்தனம் அல்ல. அதே நேரத்தில் 24 மணி நேரமும் கிளிசரின் போட்டுக் கொண்ட கண்களுடன் அலைவதே பெண்களின் வேலை அல்ல. குடும்பத்தை கெடுப்பது, மாமியார், மருமகள் சண்டை, சோகம், கோவம், குரூரம் ஆகியவற்றை தாண்டி அன்பான, திறமையான பெண்களையும், பாசிட்டிவான பெண்களையும் சீரியல்களில் காட்டினால் தொலைக்காட்சி தொல்லைக் காட்சியாக இல்லாமல் இருக்கும்!