மதன் விடுதலைக்காக வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வேண்டிய மனைவி, தாயார்
வழக்குகளில் இருந்து விடுதலையாவத்தாற்காக மதனின் மனைவியும் அவரது தாயாரும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டனர்.
சென்னை: எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார் என்பது மதன் மீதான புகார். பணத்தை மருத்துவ கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டேன் என்றும் கங்கையில் போய் ஜலசமாதியாகப் போகிறேன் என்றும் கூறிவிட்டு மாயமான மதனை 6 மாதங்களுக்குப் பின்னர் திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.
21ம் தேதி கைது செய்யப்பட்ட மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மதன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல சினிமா தயாரிப்பார்கள், நடிகர்கள், எஸ்.ஆர். எம் நிறுவன தலைவர் பச்சமுத்து, அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விளக்கம் கேட்கப்பட்டது.
நேற்றுடன் அவரது 7 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததால் மதனை மீண்டும் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன் ஆஜர்படுத்தினார்கள். மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதனை கோர்டுக்கு அழைத்து வந்ததை அடுத்து அவரது மனைவி, தாயார் ஆகியோர் வந்திருந்தனர். வேனில் ஏற்றிய மதனை, அவரது மனைவி வேன் அருகே சென்று பார்த்து பேசினார்.
மதன் விரைவில் வழக்கில் இருந்து விடுபட வேண்டும் சைதை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மன் கோவிலில் மதனின் தாயாரும், மனைவியும் என்று வேண்டிக்கொண்டனர்.
வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாகும். முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது அதிமுக வழக்கறிஞர் அணியினர் இந்த அம்மனை வேண்டி வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.