பண மோசடி பற்றி வாய் திறக்க மறுக்கும் மதன்... இறுகும் போலீஸ் பிடி
வேந்தர் மூவிஸ் மதன், மோசடியில் ஈடுபட்டது குறித்த விசாரணையை துரிதப்படுத்த, மேலும் இரு கூடுதல் துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: வடபழனியைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதன், சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் வாங்கித்தர மாணவர்களிடம் பணம் வசூலித்தார் என்பது புகார். பணத்தை வாங்கிய மதன் சீட் பெற்றுத்தராமல் ஏமாற்றிவிட்டார் என்பதும் பெற்றோர்களின் குற்றச்சாட்டு.
எஸ்ஆர்எம் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மதன் கடந்த மே மாதம் திடீரென தலைமறைவாகிவிட்டார். இதன் காரணமாக மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவதற்கு, மதனிடம் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மொத்தம் ரூ.84.27 கோடி பணத்தைக் கொடுத்து ஏமாந்த 123 பேர், சென்னை பெருநகர காவல் துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக மதனின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் கைது
கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீஸார், திருப்பூரில் அவரது தோழி வர்ஷா வீட்டில் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் மதனுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து மதனிடம் கடந்த இரு நாள்களாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸ் காவலில் மதன்
மதன் மீதான மோசடி புகார்கள், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்த தகவல்கள், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, தலைமறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றார் போன்ற தகவல்களை பெறுவதற்காக போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது.
தலைமறைவு வாழ்க்கை
மதன் தலைமறைவாக இருந்த 179 நாட்களில் கோவா, கேரளம், மணிப்பூர், உத்தராகண்ட், கர்நாடகம் உட்பட பல இடங் களுக்கு சென்றுள்ளார். தான் சென்ற அத்தனை இடங்களைப் பற்றியும் விவரமாக கூறும் மதன், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தங்கியிருந்த இடத்தைப் பற்றி மட்டும் எதுவும் தெரிவிக்க மறுக்கிறார் என்று கூறப்படுகிறது.
இரு கூடுதல் துணை ஆணையர்கள்
இதற்கிடையே, மதன் மீதான மோசடி குறித்தான புகாரில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மதன் மோசடி செய்து வைத்திருக்கும் பணத்தை மீட்க வேண்டி இருப்பதாலும், இந்த வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், மதன் வழக்கை துரிதமாக விசாரணை செய்வதற்காக, கூடுதல் துணை ஆணையர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகிய இருவரை நியமித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
பினாமி சொத்துக்கள்
மதனுக்கு நாக்பூரில் பினாமி பெயரில் ஒரு வீடு இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர். மதன் பல மாநிலங்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் எதுவுமே இதுவரை சிக்க வில்லை. இந்த ஆவணங்கள் அனைத்தையும் நாக்பூரில் உள்ள வீட்டில் வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, மதனை நாக்பூர் அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
வடபழனி வீட்டில் சோதனை
வடபழனியில் உள்ள மதனின் அலுவலகம் மற்றும் சில இடங்களில் சோதனை நடத்திவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடருவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கின் விசாரணை வேகமாக நடைபெறும் என கூறப்படுகிறது. அதேவேளையில் இந்த வழக்கில் மதனுடன் மோசடி செய்த நபர்களும், மதன் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.