மருத்துவ படிப்பு சீட் மோசடி.. கோர்ட்டில் ஆஜரான மதன்... கண்ணீர் விட்ட அழுத முதல் மனைவி
மருத்துவ படிப்பு சீட் மோசடி வழக்கில் சிக்கிய மூவேந்தர் மூவிஸ் மதனை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போது அவரது முதல் மனைவி கண்ணீர் விட்டு அழுதார்.
சென்னை: மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 80 கோடி மோசடி செய்த வழக்கில் மூவேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்திருந்த மதனின் முதல் மனைவி கண்ணீர் விட்டு அழுது நின்றார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களிடம் சீட் வாங்கித் தருவதாக கூறிய மதன் ரூ. 80 கோடி மோசடி செய்துவிட்டு மாயமானார். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், மதனின் தயாரும் மகனை கண்டுபிடித்து தரக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்குகளில் சென்னை ஐகோர்ட் மதனை பிடிக்க போலீசாரிடம் கண்டிப்பு காட்டியது. மேலும், மதனை ஆஜர்படுத்த கெடு வைத்தது. இதனைத் தொடர்ந்து மதனை தீவிரமாக தேடி வந்த போலீசார் இரு தினங்களுக்கு முன்னர் ரகசியமாக திருப்பூரில் தங்கி இருந்த மதனை கைது செய்தனர்.
இதனையடுத்து, இன்று அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக மதனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டனர். இதற்கு மதன் தரப்பு வக்கீல்கள் மறுப்பு தெரிவித்ததோடு, இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து மதனுக்கு 7 நாட்கள் போலீசில் விசாரிக்க அனுமதி வழக்கப்பட்டது.
மீண்டும் அவரை வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை காலத்தின் போது 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தினமும் வக்கீலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.
போலீஸ் தரப்பில் இருந்து 10 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்ட போதும், மதன் மிகவும் அமைதியாகவே இருந்துவிட்டார். எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் போலீஸ் காவலில் செல்ல சம்மதித்தார்.
இதனிடையே, இன்று மதன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற தகவல் தெரிந்த மதனின் முதல் மனைவி சிந்து காலையிலேயே சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்திருந்தார். தொடக்கத்தில் இருந்து மதனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வரை சிந்து அங்கேயே இருந்தார். விசாரணை நடைபெற்ற தருணங்களில் சிந்து கண்ணீர் விட்டு அழுதபடி நின்றிருந்தார்.