வேந்தர் மூவிஸ் மதனை திருப்பூர் வர்ஷா வீட்டில் வைத்து போலீஸ் விசாரணை
போலீஸ் காவலில் உள்ள வேந்தர் மூவிஸ் மதனை திருப்பூருக்கு அழைத்துச் சென்று வர்ஷாவின் வீட்டில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் : மருத்துவ மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மாயமான வேந்தர் மூவிஸ் மதன் கடந்த 21ம் தேதி திருப்பூரில் அவரது தோழி வர்ஷாவின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மதன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கடந்த 7 தினங்களாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கேட்டுள்ளனர். மேலும் மதனின் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த வாட்சப் உரையாடல்கள் குறித்தும் விசாரணையின் போது கேட்டறிந்ததாக தெரிகிறது.
மோசடி பணம் எங்கே?
மோசடி செய்த பணத்தை, நடிகர், தயாரிப்பாளர்கள் சிலரிடம் கொடுத்துள்ளதாக, மதன் கூறினார். மதனிடம், நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில், மோசடி பணம் குறித்த கேள்விக்கு, படத்தை வாங்கி வெளியிடுவதற்காக, முன் பணமாக, ஒரு நடிகர், சில தயாரிப்பாளர்களிடம் கொடுத்துள்ளதாக மதன் கூறியுள்ளார்.
போலீஸ் சம்மன்
மாணவர்களிடம் வசூலித்த பணத்தில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் மதன் இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 20க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். எஸ்.ஆர்.எம் நிறுவனர் பச்சமுத்து, அவரது மகன் ரவி பச்சமுத்துவிடமும் விளக்கம் பெறப்பட்டுள்ளது.
வர்ஷா வீட்டில் பணம்
இந்த நிலையில் மதனின் தோழி வர்ஷாவின் வீட்டில்தான் மதன் சில வாரங்களாக தங்கியிருந்தார். ரகசிய அறையில் மதன் தங்கியிருந்தார். அங்கு பணம் எதுவும் பதுக்கி வைத்துள்ளாரா என்பது பற்றி விசாரிக்க மேலும் 2 தினங்கள் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மதனை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற போலீசார், வர்ஷாவின் வீட்டில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதனின் சொத்துக்கள்
மாணவர்கள் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டுதான் மதன் மாயமானார். அதை அவரது தாயாரே கூறியுள்ளார். வெளியூர் செல்லும் போது மதன் பணம் எடுத்துச் சென்றார் என்றும் கூறினார். வர்ஷாவிற்கு வீடு, சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதன் கொடுத்த பணம் பற்றி வர்ஷாவிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.