ரவுடி புல்லட் நாகராஜன் மிரட்டல்.. போலீஸில் இன்ஸ்பெக்டர் மதனகலா புகார்
தேனி: ரவுடி புல்லட் நாகராஜன் மிரட்டல் குறித்து ஜெயமங்கலம் இன்ஸ்பெக்டர் மதனகலா போலீஸில் புகார் அளித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஜெயமங்கலத்தில் கைதிகளை தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா அடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மதனகலாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன், காக்கி சட்டை போட்டா விஜயசாந்தினு நெனப்பா, எனக்கு கோபம் வந்தால் மிருகம் போல் வேட்டையாடிடுவேன் என்றும் பின்னர் ஈ மொய்த்தபடி அனாதையாக சாகாதீர் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த ஆடியோ வைரலான நிலையில் போலீஸாரையே ஒரு ரவுடி மிரட்டுவதா என அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மதனகலா ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புல்லட் நாகராஜன் மீது புகார் அளித்துள்ளார். மேலும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மதுரை மத்திய சிறையில் எஸ்பியாக உள்ள ஊர்மிளாவையும் லாரி ஏற்றிக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.