அடேங்கப்பா... ஆளே இல்லாத டீ கடையில் அற்புதமாக டீ ஆற்றிய "மாதவன் தீபா"
கணவரின் பெயருக்கு பின்னால் மனைவியின் பெயரைப் போட்டு பெருமை சேர்த்தவர்களின் முன்னணியில் இருக்கிறார் தீபாவின் கணவர் மாதவன். கூட்டமே இல்லாமல் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கோவை: புதிய கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தை வெறும் சேர்களை மட்டுமே வைத்து நடத்தியுள்ளார் மாதவன் தீபா. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆற்றிய அவர், போகிற போக்கில் தீபா அம்மாவை முதல்வராக்குவதுதான் தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஏதோ தன் வீட்டு முன்னாள் கூடிய கூட்டத்திற்காக பேரவையை தொடங்கி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு படகு சின்னம் கிடைக்கவே எம்ஜிஆரின் படகோட்டி, மீனவ நண்பன் பாணியில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். வெயில்தான் தீபாவை வாட்டி எடுக்கிறது. குடை பிடிக்க கூடவே ஒருவரை கூட்டிச் செல்கிறார்.
வேட்புமனுவில் கணவர் பெயரை மறதியாக குறிப்பிட மறந்து விட்டதாக மாதவன் மனதைத் தேற்றிகொண்டாலும் தீபாவை முதல்வராக்கும் வேகத்தோடு புதிய கட்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தை ஊர் ஊராக சென்று நடத்தி வருகிறார்.
ஆளே இல்லாத டீக்கடை
கோவையில், புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, தீபாவின் கணவர் மாதவன் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் வந்ததால், வெறிச்சோடி காணப்பட்டது. வெறும் சேர்கள் மட்டுமே அணிவகுத்து இருக்க ஆலோசனை நடத்தினார்.
மாதவன் தீபா
மேடையில் வைக்கப்பட்டிருந்த போர்டில், 'தலைமை' என்ற இடத்தில் மாதவன் பெயரோடு தீபாவின் பெயரையும் சேர்த்து, 'மாதவன் தீபா' என்று அச்சிடப்பட்டிருந்தது.
மனைவி பெயரை தன் பின்னால் போட்டு அடையாளப்படுத்திக்கொண்டார். அதானே வெறும் மாதவன் என்றால் யாருக்கு தெரியும்?
ஓ.பன்னீர் செல்வம்
ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆற்றிய மாதவன், ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக பேசினார். முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த போது "பதவி ஆசை பிடித்து, ராவோடு ராவாக நடுராத்திரியில் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் ஒன்றும் உத்தமன் கிடையாது. அவரைப் போலத்தான் சசிகலாவும். இந்த இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவரும் ஒன்றுதான் என்றார்.
தீபா அம்மா
தீபா அம்மாவுக்கு முதல்வராக வருவதற்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, எங்களின் ஒரே குறிக்கோள், தீபா அம்மாவை முதல்வர் ஆக்குவதுதான்.
என்னைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்தையும், தி.மு.க.வையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னை யாரும் பணத்தால் வாங்க முடியாது என்று பேசினார். ஆனால் பாவம் அவர் பேசியதை கேட்டு கை தட்டுவதற்குக் கூட ஆட்கள் இல்லை என்பதுதான் சோகம்.
விடாமல் விரட்டும் மாதவன்
என்னதான் மாதவனை அவரது மனைவி தீபா கழற்றி விட்டாமல் அவர் விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறார். தனது மனைவி பெயரை தன்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டு இப்போது முதல்வராக்க முயற்சி செய்து வருகிறார். என்னடா இந்த தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த சோதனை.