நல்லா சொன்னீங்க தலைவா.. ரஜினியை வாழ்த்தி வரவேற்கும் குடிகாரர்கள் சங்கம்
படிப்படியாகத்தான் குடியையும், சிகரெட்டையும் நிறுத்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்றுள்ளது.
சென்னை: படிப்படியாக குடிப்பழக்கத்தையும், புகைப்பழக்கத்தையும் விட்டுவிட்டு குடும்பத்தை பற்றி யோசியுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்றுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதை இன்று தொடங்கினார். இன்று 5 நாள்களுக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதில் ரஜினி காந்த் பேசுகையில், மதுப்பழக்கத்தையும், புகைப்பழக்கத்தையும் ரசிகர்கள் விட்டு விட வேண்டும். அதுவும் படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, மன நலமும் பாதிக்கப்பட்டு நாம் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறாக வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.
இந்நிலையில் அவரது கருத்தை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவரான செல்லப்பாண்டியன் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி!நன்றி!! இன்று ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, மது குடிப்பவர்கள் உடனே நிறுத்த முடியாது. படிப்படியாகதான் நிறுத்த முடியும். குடிப்பவர்கள் எல்லோரு யோகியோ... சித்தரோ இல்லை.. ஆகவே படிப்படியாக குறையுங்கள் என பேசியதை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது.
ரஜினி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். ஆரம்பகால படங்களில் புகைபிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துள்ளதால் ஒரு "குடி மீட்பு மையம்" உங்கள் சொந்த செலவில் திறந்திட தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அன்புடன் வேண்டுகிறது என்று கூறியுள்ளார்.