ரூ.1.50 கோடிக்கு குக்கர் - டிடிவி தினகரன் மீது கிரிமினல் வழக்கு போடுங்க - மதுசூதனன் புகார்
டி.டி.வி தினகரன் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் மதுசூதனன் புகார் அளித்துள்ளார்.
சென்னை: டி.டி.வி தினகரன் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் மதுசூதனன் புகார் அளித்துள்ளார். வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.1.5 கோடி மதிப்புள்ள குக்கர்களை டி.டி.வி. தினகரன் வாங்கி உள்ளதாக தனது புகாரில் கூறியுள்ளார்.
மதுசூதனன், தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், ஆர்கே நகரில் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வரி ஏய்ப்பு நடந்ததா என சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
குக்கருக்கான தொகையை தேர்தல் கணக்கு செலவில் சேர்த்து தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குக்கர் கடை உரிமையாளர், தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுசூதனன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தவித்து வருகிறது. ஒன்றிரண்டு வாகனங்களை மட்டும் சோதிக்கும் பலமே தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளால் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அதிமுக மீது டிடிவி தரப்பும், டிடிவி தரப்பு மீது அதிமுகவினரும் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர்.
பணப்பட்டு வாடா புகாரினால் தான் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானது.
ஆர்.கே.நகரில் பணமழை பொழிந்து வருதால் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழலை பொறுத்து தேர்தல் ரத்து பற்றி முடிவு என்று தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா தெரிவித்துள்ளார்.